Breaking News
புதிய உச்சத்தை தொடுகிறது டீசல் விலை 80 ரூபாயை நெருங்கியது 5-ந்தேதி இறங்கிய வேகத்தில் மீண்டும் ஏறியது

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே அன்றாடம் நிர்ணயம் செய்து வருகின்றன. அதன்படி தினந்தோறும் காலை 6 மணிக்கு பெட்ரோல் நிலையங்களில் புதிய விலை அமல்படுத்தப்படுகின்றன.

மத்திய அரசின் கையில் இருந்து எண்ணெய் நிறுவனங்கள் கைக்கு விலை நிர்ணயம் சென்ற தொடக்கத்தில் பெட்ரோல்-டீசல் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து விலை ஏறுமுகத்திலேயே இருக்கிறது. இதனால் வரலாறு காணாத வகையில் பெட்ரோல்-டீசல் விலையில் உயர்வு காணப்பட்டது.
சென்னையில் கடந்த 4-ந்தேதி நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.87.33-க்கும், டீசல் ரூ.79.89-க்கும் விற்பனையாகி வாகன ஓட்டிகளை அதிர்ச்சிக்குள்ளாகியது. இந்தநிலையில் பெட்ரோல்-டீசல் உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று நாடு முழுவதும் ஒருமித்த குரல் எழுந்தது.

இதையடுத்து பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை லிட்டருக்கு தலா 2 ரூபாய் 50 காசு குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. இதன் காரணமாக புதிய உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருந்த பெட்ரோல், டீசல் விலை குறைந்தது. 5-ந்தேதி நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.70, டீசல் ரூ.77.11 என விலை குறைந்து விற்பனை ஆனது.

மத்திய அரசின் நடவடிக்கையால் பெட்ரோல், டீசல் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகத்தில் செல்ல தொடங்கியது.

கடந்த 10 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 29 காசுகளும், டீசல் விலை 2 ரூபாய் 69 காசுகளும் விலை அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85.99-க்கும், டீசல் ரூ.79.80-க்கும் விற்பனை ஆனது.

மத்திய அரசின் வரி குறைப்பு நடவடிக்கைக்கு முன்பு, அதாவது 4-ந்தேதி ஒரு லிட்டர் டீசல் ரூ.79.89 ஆக இருந்தது. தற்போது மீண்டும் அதே நிலையை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.