Breaking News
தீபிகா படுகோனே திருமணத்தில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா: பாலிவுட்டைக் கலக்கும் நம்மூர் இனிப்பு

கோயம்புத்தூரைத் தலைமையகமாகக் கொண்ட ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாவுக்கு அறிமுகம் தேவையில்லை. தற்போது பாலிவுட்டின் பிரபலமான நட்சத்திரங்கள் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் சுவையை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

பாலிவுட்டின் பிரபல நட்சத்திரங்களான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோரின் திருமணம் நவம்பர் 14 மற்றும் 15-ம் தேதிகளில் மிகப் பிரம்மாண்டமான முறையில் இத்தாலியிலுள்ள லேக் கோமா நகரில் நடைபெற்றது. முதல்நாள் கொங்கினி கலாச்சார முறைப்படியும் அடுத்த நாள் சிந்தி கலாச்சாரப்படியும் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட விழாவில் உறவினர்களும் நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டனர்.

பல வருடங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில் தீபிகா படுகோன் ஹாலிவுட்டிலும் கால் பதித்தார். சில வாரங்களுக்கு முன் தங்களது திருமணச் செய்தியை ரன்வீர் சிங்கும், தீபிகாவும் ட்விட்டரில் ஒரு சேர அறிவித்தபின்அவர்களது திருமணம் குறித்த செய்திகள் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டன.

இந்நிலையில், சக திரையுலக நட்சத்திரங்கள், ஊடகவியலாளர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகளுக்கு புதுமணத் தம்பதிகளிடமிருந்து தனிப்பட்ட கடிதத்துடன் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா இனிப்புப் பெட்டகமும் அனுப்பப்பட்டது. இந்தத் தகவலை பல பிரபலங்கள் ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார்கள். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாவின் சுவை பற்றியும் அவர்கள் குறிப்பிடத் தவறவில்லை

வ்வாறு பதிவிடப்பட்ட ட்வீட்களில், “ரன்வீரும் தீபிகாவும் இந்த மைசூர்பாவுக்கு மிகப்பெரிய ரசிகர்களாக இருந்திருக்க வேண்டும். தீபிகா- ரன்வீரின் அன்பளிப்புக்கு நன்றி” என்றும் “அவர்களது திருமணப் புகைப்படங்களை விட, உடன் வந்த கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாதான் இப்போதே வேண்டும்” என்றும் “மைசூர்பாவில் காணாமல் போன ‘க்’ பற்றிய எங்களது விளக்கம், அது மைசூர் பாக் என்று சொல்வதற்கு முன்னரே நாவில் கரைந்து மறைந்து விட்டது” என்றும் பிரபலங்கள் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்கள்.

இதைப் பல நெட்டிசன்கள் பதிவிட்டும், பகிர்ந்தும் தமிழகத்தின் பெருமை இது எனக் கொண்டாடி வருகின்றனர்.

இது குறித்து ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனர் எம். கிருஷ்ணனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “ஒரு முக்கியமான பிரபலத்திற்காக மைசூர்பா மொத்தமாகத் தேவை என எங்களது பெங்களூரூ கிளையினைத் தொடர்பு கொண்டு வாங்கினார்கள். அப்போது தீபிகா படுகோனே- ரன்வீர் தம்பதியின் திருமண கொண்டாட்டத்திற்குத்தான் செல்கிறது என்பது எங்களுக்குத் தெரியாது.

திரை நட்சத்திரங்களும், முக்கியஸ்தர்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இனிப்புப் பெட்டகத்தையும் கடிதத்தையும் பகிர்ந்து வைரலான பிறகுதான் தெரிந்துகொண்டோம். அன்பைச் சொல்ல அழகான வழியைத் தேர்ந்தெடுத்த புதுமணத் தம்பதிகளுக்கு எங்கள் வாழ்த்துகள். எங்கள் மைசூர்பாவுடனான இனிய தருணங்களைப் பகிர்ந்து கொண்ட எங்கள் பிரியமுள்ள வாடிக்கையாளர்களுக்கு நன்றியும் அன்பும்” என்று தெரிவித்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.