Breaking News
நிதி மோசடி வழக்கு விசாரணை: அமலாக்கத்துறை முன் இன்றும் ஆஜர் ஆகிறார் ராபர்ட் வதேரா

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனரும், சோனியாவின் மருமகனுமான ராபர்ட் வதேரா ரியல் எஸ்டேட் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவர் இங்கிலாந்தில் ஏராளமான சொத்துக்களை முறைகேடாக வாங்கியிருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதில் லண்டனின் பிரன்யன் சதுக்கத்தில் வதேராவுக்கு சொந்தமானதாக கூறப்படும் 1.9 மில்லியன் பவுண்டு (சுமார் ரூ.17 கோடி) மதிப்புடைய சொத்து வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள், நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆனால் இந்த வழக்குகள் அனைத்தும் பொய்யானவை என குற்றம் சாட்டிய வதேரா, தன் மீது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகவே இந்த வழக்குகள் போடப்பட்டு இருப்பதாக கூறினார். மேலும் இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு டெல்லி சிறப்பு கோர்ட்டில் அவர் மனுத்தாக்கலும் செய்தார். இதை விசாரித்த கோர்ட்டு, வதேராவை கைது செய்ய 16–ந் தேதி வரை இடைக்கால தடை விதித்தது. எனினும் அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணைக்கு வதேரா முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும், இதற்காக 6–ந் தேதி (நேற்று) அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று டெல்லி ஜாம்நகர் ஹவுசில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு ராபர்ட் வதேரா வந்தார். அவரிடம் ஏறத்தாழ 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில், இன்றும் ராபர்ட் வதேராவிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது. விசாரணைக்காக இன்று காலை 10.30 மணிக்கு ராபர்ட் வதேரா அமலாக்கத்துறை அலுவலகத்தில், ஆஜர்ஆக உள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.