Breaking News
ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவு: 6 போலீசார் உட்பட 10 பேரை காணவில்லை

ஜம்மு காஷ்மீரில் கடுமையான பனிப்பொழிவு கடந்த சில நாட்களாக நிலவுகிறது. இந்த சூழலில், குல்காம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீநகர் – ஜம்மு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஜவஹர் சுரங்கத்தில் பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில் அங்கு இருந்த போலீஸ் நிலையும் சிக்கியது. பனிச்சரிவு ஏற்படும் போது போலீஸ் நிலையில் 20 பேர் இருந்துள்ளனர். இதில்,10 பேர் நல்வாய்ப்பாக தப்பிய போது, ஏனைய 10 பேர் பனிச்சரிவில் சிக்கினர்.

10 பேரில் 6 பேர் போலீஸ்காரர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. பனிச்சரிவில் சிக்கிய 10 பேரையும் மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீரில் உள்ள 22 மாவட்டங்களில் 16 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பனிச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடுமையான பனிப்பொழிவு காரணமாக 2-வது நாளாக ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை 2-வது நாளாக மூடப்பட்டுள்ளது. ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தொடர் பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.