Breaking News
தமிழகத்தில் டெபாசிட் இல்லை, ஆந்திராவில் போட்டியாம்! விசிகவை கலாய்க்கும் நெட்டிசன்கள்

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் இருந்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அதன் தலைவர் திருமாவளவன் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இந்த நிலையில் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுக கூட்டணியில் இருப்பதாக கூறிக்கொண்டாலும், திமுக அதனை உறுதி செய்யவில்லை. ஒருவேளை திமுக கூட்டணியில் விசிக இடம்பெறவில்லை என்றால் வரும் பாராளுமன்ற தேர்தலிலும் விசிக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் பல ஆண்டுகளாக கட்சி நடத்தி ஒருசில தொகுதிகளில் மட்டுமே அதுவும் கூட்டணி உதவியால் வெற்றி பெற்று வரும் விசிக, வரும் பாராளுமன்ற தேர்தலில் ஆந்திராவில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது

ஆந்திரா மாநிலத்தில் சமீபத்தில் விசிக நடத்திய தேசம் காப்போம் மாநாட்டுக்கு பெருந்திரளாக வந்திருந்த கூட்டத்தை பார்த்து அங்கு போட்டியிட விசிக முடிவு செய்திருப்பதாகவும், ஆந்திராவில் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பிடிக்க விசிக முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்திலேயே இன்னும் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற முடியாத விசிக, ஆந்திராவில் போட்டியிடுவது குறித்து வெளியான செய்தியை நெட்டிசன்கள் வழக்கம்போல் கிண்டலடித்து வருகின்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.