Breaking News
மீண்டும் ஒரு பயங்கர தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகம்மது திட்டம்

புல்வாமா தாக்குதல் திட்டம் வெற்றி அடைந்ததை அடுத்து மற்றொரு மிகப் பெரிய பயங்கரவாத தாக்குதலை நடத்த ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

பிப்.,14 ம் தேதி புல்வாமா மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது வெடி பொருட்கள் நிரப்பிய காரை மோத செய்து, தற்கொலைப்படை தாக்குதலை ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பினர் நடத்தினர். இதில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு பிறகு பிப்.,16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் சிலர், பாக்.,ல் உள்ள ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தலைமையுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். இந்த உரையாடல்களை உளவுத்துறை இடைமறித்து கேட்டுள்ளது.

இதில், புல்வாமா தாக்குதல் வெற்றி அடைந்து விட்டதால் அடுத்தகட்டமாக மீண்டும் ஒரு, பெரிய அளவிலான வெடிகுண்டு தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்திய பாதுகாப்பு படையில் முந்தைய தாக்குதலை விட அதிக அளவில் உயிர் சேதத்தை ஏற்படுத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த பயங்கர தாக்குதலை காஷ்மீர் அல்லது காஷ்மீருக்கு வெளியே நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிப்.,19 உளவுத்துறை அறிக்கையின்படி, காஷ்மீர் உட்பட 3 இடங்களில் மிகப் பெரிய அளவில் தாக்குதல் நடத்துவதற்காக 3 தற்கொலைப்படையினர் உள்ளிட்ட ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தை சேர்ந்த 21 பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே காஷ்மீருக்கும் ஊடுருவி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த பயங்கரவாத தாக்குதல் நடத்தினால் இந்தியா நிலை குலைந்து போகும் என்பதால் உளவியல் ரீதியாக இந்தியா மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம் வகுத்து வருவதாக போலீஸ் அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.