Breaking News
இங்கிலாந்து பிரதமர் இம்ரான்கானுடன் தொலைபேசியில் பேச்சு; தீவிரவாதத்தினை ஒடுக்க வலியுறுத்தல்

காஷ்மீருக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்துவதற்காக பாகிஸ்தான் போர் விமானங்கள் கடந்த 26ந்தேதி வந்தன. ஆனால் இந்திய போர் விமானங்கள் அவற்றை விரட்டியடித்து, தாக்குதல் முயற்சியை வெற்றிகரமாக முறியடித்தன. ஆனால் இந்த நடவடிக்கையின்போது எதிர்பாராதவகையில் ‘மிக்-21’ ரக போர் விமானம் ஒன்று பாகிஸ்தான் எல்லையில் விழுந்தது.

அதில் இருந்த இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை, பாகிஸ்தான் சிறை பிடித்தது. அவரை, ஜெனீவா ஒப்பந்தத்தின்படி இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்திய தரப்பில் கூறப்பட்டது. தொடர்ந்து சர்வதேச அளவில் தரப்பட்ட அழுத்தத்தினால் அந்நாடு இதற்கு ஒப்புதல் அளித்தது. இதன்படி அபிநந்தன் இந்தியாவிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டார்.

இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசினார். இந்த பேச்சில் தீவிரவாத குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி அவர் கூறினார்.

தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் பதற்றத்தை தணிக்கும் வகையில் இந்திய விமானி அபிநந்தனை விடுவித்ததற்கு பாராட்டு தெரிவித்தார். அதோடு பாகிஸ்தானில் இருக்கும் அனைத்து தீவிரவாத குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் குறித்தும் அவர் வலியுறுத்தினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.