Breaking News
ஐ.பி.எல்: அனில் கும்ப்ளே பஞ்சாப் அணியின் இயக்குனராக நியமனம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கிரிக்கெட் செயல்பாடுகள் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். மும்பையில் நடந்த பஞ்சாப் அணியின் செயல் குழு கூட்டத்தில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டுவந்த அனில் கும்ப்ளே, கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பதவியில் இருந்து விலகினார். தற்போது பஞ்சாப் அணியின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள கும்ப்ளே, இதற்கு முன்னதாக ஐ.பி.எல் அணிகளான மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய இரு அணிகளுக்கு பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார்.

பஞ்சாப், டெல்லி மற்றும் பெங்களூரு ஆகிய மூன்று அணிகளும் இதுவரை ஒருமுறை கூட ஐ.பி.எல் கோப்பையை வென்றதில்லை. கடந்த 2014 ஆம் ஆண்டு இறுதிச்சுற்று வரை முன்னேறிய பஞ்சாப் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் வீழ்ந்தது. அதன் பின்னர் கடந்த இரு ஆண்டுகளாக பிளே-ஆப் சுற்றைக் கூட தாண்டவில்லை. இந்நிலையில் அனில் கும்ப்ளே இயக்குனராக நியமிக்கப்பட்ட பிறகு பஞ்சாப் அணி சிறப்பாக செயல்படும் என நம்புவதாக அந்த அணியின் இணை உரிமையாளர் நெஸ் வாதியா தெரிவித்தார்.

பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் டெல்லி அணிக்கு மாற இருப்பதாக தகவல் வெளியான நிலையில், “அஸ்வின் எங்கள் அணியின் ஒருங்கிணைந்த பகுதி. அவரை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம்” என்று நெஸ் வாதியா குறிப்பிட்டுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.