Breaking News
ரஜினியின் ‘பேட்ட ’ 2-ம் பாகம்?

ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்தின்2-ம் பாகம் 2.0 என்ற பெயரில் ஏற்கனவே வந்தது. அடுத்து அவரது ‘பேட்ட‘ படத்தின் 2-ம் பாகமும் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பேட்ட படம் கடந்த வருடம் பொங்கல் பண்டிகையில் திரைக்கு வந்தது. ரஜினியுடன் விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், திரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கினார். இதில் ரஜினி இளமை தோற்றத்தில் வந்து அதிரடி சண்டை காட்சிகளில் நடித்தது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. பழைய படங்களில் பார்த்த ரஜினியை பார்க்க முடிந்ததாக சந்தோஷப்பட்டனர். பேட்ட படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா? என்று கார்த்திக் சுப்புராஜிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கேள்விக்கு பதில் அளித்து அவர் கூறும்போது, “பேட்ட படம் வெளியானதும் இரண்டாம் பாகத்தை உருவாக்கும்படி ரசிகர்கள் வேண்டினர். 2-ம் பாகம் கதை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து யோசனைகளும் சொன்னார்கள். அது சுவாரஸ்யமாக இருந்தது. 2-ம் பாகத்துக்கான கதை இப்போது என்னிடம் இல்லை. எதிர்காலத்தில் அது நடக்கலாம்“ என்றார். ஏற்கனவே காஞ்சனா, திருட்டுப்பயலே, சாமி, பில்லா, வேலை இல்லா பட்டதாரி, சண்டக்கோழி, விஸ்வரூபம், கோலி சோடா, மாரி, தமிழ் படம், கலகலப்பு உள்ளிட்ட பல படங்கள் 2ம் பாகமாக வந்துள்ளன. சிங்கம் 3 பாகங்கள் வந்துள்ளன. அரண்மனை 3ம் பாகம் தயாராகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.