Breaking News
இந்தியாவில் ஏப்ரல் மாத நடுவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தை தொடும் – நிபுணர்கள் கணிப்பு

புதுடெல்லி

இந்தியாவில் கடந்த பிப்ரவரி நடுவில் கொரோனா வைரஸ் 2-வது அலை தொடங்கியது. ஒன்றரை மாதங்களில் மராட்டியம், சத்தீஸ்கார், கர்நாடகா, பஞ்சாப், தமிழகம், கேரளா, டெல்லி, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அதி வேகமாகப் பரவி வருகிறது.

மத்திய சுகாதாரத் துறையின் இன்றைய புள்ளிவிவரத்தின்படி நாடு முழுவதும் புதிதாக 89,129 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதுபோலவே கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 714 பேர் பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், பாரத ஸ்டேட் வங்கியின் நிபுணர் குழு கொரோனா 2-வது அலை குறித்து ஆய்வு செய்து கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக அறிக்கை வெளியிட்டது. அதில் இந்தியாவில் கொரோனா 2-வது அலை ஏப்ரல் நடுவில் உச்சத்தை தொடும் என்றும் மே மாதம் வரை பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து கான்பூர் ஐஐடி பேராசிரியர் மணீந்திர அகர்வால், கொரோனா வைரஸ் பரவல் குறித்து ஆய்வு செய்து தனது கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறும்போது, “ஏப்ரல் 15 முதல் 20-ம் தேதிக்குள் கொரோனா தொற்று உச்சத்தை தொடும். அப்போது நாள்தோறும் ஒரு லட்சம் பேருக்கு தொற்று ஏற்படலாம். அந்த எண்ணிக்கையை தாண்டவும் வாய்ப்புள்ளது. எனினும் மே இறுதியில் வைரஸ் பரவல் கணிசமாகக் குறையும். அடுத்த 4 நாட்களில் பஞ்சாபில் வைரஸ் பரவல் உச்சத்தை தொடக்கூடும். ஏப்ரல் 10-ம் தேதி அளவில் மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்று உச்சத்தை எட்டலாம்” என்று கணித்துள்ளார்.

அரியானாவின் அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கவுதம் மேனன் கூறும்போது, “ஏப்ரல் மத்தியில் தொடங்கி மே மாதம் மத்திக்குள் கொரோனா வைரஸ் உச்சத்தை தொடும்” என்று தெரிவித்துள்ளார்.

மராட்டிய மாநிலத்தில் தற்போது நாள்தோறும் 40,000-க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று ஏற்படுகிறது. நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா நோயாளிகளில் 60 சதவீதம் பேர் அந்த மாநிலத்தில் உள்ளனர். அங்கிருந்து வேறு மாநிலங்களுக்கு வைரஸ் பரவுவதை தடுக்க வேண்டும். அப்போதுதான் இந்தியாவின் 2-வது கொரோனா அலையை கட்டுப்படுத்த முடியும் என்று பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.