Breaking News
அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரன் இணைப்பு தொடர்பான ஆலோசனை: ஓபிஎஸ் தலைமையிலான செயல்வீரர்கள் கூட்டம் ரத்து!!

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் பெரியகுளத்தில் நாளை நடைபெற இருந்த செயல்வீரர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அதிமுக செயல்வீரர்கள் கூட்டமானது தேனிமாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டியில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணைவீட்டில் புதன்கிழமை இரவு நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் நடத்துவதற்கான முதல் காரணம், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பெரும் தோல்வியை சந்தித்ததற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்வதற்கும், அதன் அடிப்படையில் வரும் தேர்தலிகளில் சிறப்பாக செயல்படுவதற்கான முன்னோட்டம் என்னென்ன என்பதை குறித்து நிர்ணயிக்கும் கூட்டமாக நடைபெற்றது.

அக்கூட்டத்தில் கலந்து கொண்ட செயல்வீரர்கள் அனைவருமே அதிமுக பிரிந்திருப்பதால்தான் தோல்வி ஏற்பட்டது என்றும் சசிகலா, டி.டி.வி. தினகரனை அதிமுகவில் இணைக்க வலியுறுத்தியும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக பிளவுபட்டுள்ளதால் தான் தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்து வருகிறது. சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோருடன் நிபந்தனையற்றப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம் என அதிமுக மாவட்டச் செயலாளர் எம். சையதுகான் தெரிவித்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக சசிகலா, டிடிவி தினகரனை அதிமுகவில் இணைப்பது தொடர்பாக நாளை ஓபிஎஸ் தலைமையில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறவிருந்த நிலையில், கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதிமுக தரப்பில் இருந்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதால் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.