Breaking News
ரஷியாவிடமிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து கேள்வி – இந்தியா அதிரடி பதில்
புதுடெல்லி,
உக்ரைன் மீது ரஷியா 37-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போர் உலக நாடுகளின் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போரை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
அதேவேளை, மேற்கத்திய நாடுகள், ஆசிய நாடுகள், வளைகுடா நாடுகள் என பல்வேறு நாடுகளும் இந்த போரில் தங்கள் நிலைப்பாட்டை கவனமாக கையாண்டு வருகின்றன.
குறிப்பாக, இந்த போரில் இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகள் மிகவும் கூர்மையாக கண்காணித்து வருகின்றன. இந்த போரில் இந்தியாவை தங்கள் பக்கம் கொண்டு வர அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளும் மற்றும் ரஷியாவும் முயற்சித்து வருகின்றன.
இதன் காரணமாக சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யீ, இங்கிலாந்து வெளியுறவுத்துறை மந்திரி எலிசபெத் ட்ரூஸ், ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ் என பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இதற்கிடையில், ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 2 சதவீதம் ரஷியாவிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் (ஏப்ரல் 2021 முதல் ஜனவரி 2022 வரை) இந்தியா ரஷியாவிடமிருந்து 7.20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் (94.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) 175.90 மில்லியன் டன்கள் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்திருந்தது.
ஆனால், உக்ரைன் மீது ரஷியா தாக்குதலை தொடங்கிய பிப்ரவரி மாதம் முதல் இந்தியா ரஷியாவிடமிருந்து கூடுதலாக கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ரஷியாவிடமிருந்து 3 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் சந்தை மதிப்பை விட 20 முதல் 25 சதவீத தள்ளுபடி விலையில் இந்த கொள்முதல் நடைபெற்றுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த கொள்முதல் அமெரிக்க டாலரில் அல்லாமல் இந்திய ரூபாயில் நடைபெற்றதாக முதலில் தகவல் வெளியான நிலையில் ரூபாயில் வாங்கப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. இந்தியாவின் இந்த முடிவு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிடையே கலக்கம் மற்றும் இந்தியாவுடனான உறவில் விரிசலையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்தியா வந்துள்ள இங்கிலாந்து வெளியுறவுத்துறை மந்திரி எலிசபெத் ட்ரூஸ்-ஐ இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் இரு வெளியுறவுத்துறை மந்திரிகளும் கூட்டாக செய்தியாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது, ரஷியாவிடமிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவின் முடிவு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறுகையில்,
ஐரோப்பிய நாடுகள் கடந்த மாதம் ரஷியாவிடம் இருந்து வாங்கிய கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை விட இம்மாதம் (மே) 15 சதவீதம் கூடுதலாக வாங்கியுள்ளன. ரஷியாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குவது ஐரோப்பிய நாடுகள் தான்.
நாங்கள் (இந்தியா) எங்கள் கச்சா எண்ணெய் தேவையின் பெரும்பகுதியை மத்திய கிழக்கு நாடுகளிடமிருந்து தான் வாங்குகிறோம். அதேபோல், 7.5 முதல் 8 சதவீத கச்சா எண்ணெய்யை நாங்கள் அமெரிக்காவிடமிருந்து வாங்குகிறோம். எங்களின் கச்சா எண்ணெய் தேவையில் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே நாங்கள் ரஷியாவிடமிருந்து வாங்குகிறோம்.
கச்சா எண்ணெய் விலை உயரும்போது நாடுகள் தங்கள் மக்களின் நலனுக்கு எது நல்லதோ அந்த முடிவை எடுக்கின்றன. நாம் இப்போதிலிருந்து அடுத்த 2 முதல் 3 மாதங்கள் காத்திருந்து ரஷியாவிடமிருந்து அதிக அளவு கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு அதிக அளவில் வாங்குவது யார் என்று பார்த்தால் அந்த பட்டியலில் முதல் 10 இடங்கள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்காது. நாங்கள் அந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் கூட இருக்கமாட்டோம்’ என்றார்.
உலக அளவில் கச்சா எண்ணெய்யை அதிக அளவில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலில் ரஷியா 3-வது இடத்தில் உள்ளது. உலக தேவையில் 10 சதவீதம் கச்சா எண்ணெயை ரஷியா உற்பத்தி, ஏற்றுமதி செய்கிறது. அதேவேளை ரஷியா தனது மொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 27 சதவீத ஏற்றுமதியை ஐரோப்பிய நாடுகளுக்கு மேற்கொள்கிறது.
ஐரோப்பிய நாடுகளின் தங்கள் மொத்த கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தேவையில் 40 சதவீதம் ரஷியாவிடமிருந்தே பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து வரும் சூழ்நிலையிலும் ஐரோப்பிய நாடுகள் ரஷியாவிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய்யை வாங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.