Breaking News
அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை உயர வாய்ப்பு..!! – வானிலை மையம்
சென்னை,
தமிழகத்தில் தெற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “ தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 6-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை தெற்கு தமிழக கடலோர மாவட்டங்கள், உள் தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
(அதன்படி தமிழகத்தில் இன்று ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென் கடலோர மாவட்டங்கள், வேலூர், திருப்பத்தூர், நீலகிரி, நாமக்கல், ஈரோடு, கரூர், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் 5-ந் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது)
அதிகபட்ச வெப்பநிலையாக தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பில் இருந்து 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்
சென்னை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
04-05-2022, 05-05-2022, 06-05-2022 ஆகிய நாட்களில் மத்திய வங்கக்கடல், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று அதில் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.