Breaking News
செஸ் ஒலிம்பியாட் முன்னேற்பாடு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க திட்டம்

சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் முன்னேற்பாடுகள் குறித்து தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, வருகிற 28ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னை தலைமை செயலகத்தில், மாமல்லபுரத்தில் வருகிற 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி  தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது.

கூட்டத்தில், சர்வதேச செஸ் விளையாட்டு வீரர்கள் வருகை குறித்த விவரங்கள், விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், தங்குமிட வசதிகள், தொடக்க விழா மற்றும் நிறைவு விழா ஏற்பாடுகள், அழைக்கப்படும் முக்கிய அழைப்பாளர்கள், விழிப்புணர்வு நடவடிக்கைகள், செஸ் ஒலிம்பியாட் தீபம் உள்ளிட்டவை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், சென்னை விமான நிலையத்தில் விளையாட்டு வீரர்களுக்காக ஏற்படுத்தப்பட்டு வரும் வசதிகள் குறித்து நேரில் ஆய்வு செய்த  பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அதுகுறித்த விவரங்களை முதல்வரிடம் எடுத்துரைத்தார்.
44வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நடைபெறும் நேரு உள் விளையாட்டரங்கம், போட்டிகள் நடைபெறும் மாமல்லபுரம் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து சுற்றுசூழல்-காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் விளக்கினார்.

சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலை நிகழ்ச்சிகள், Hop-on-Hop-off  பேருந்து வசதிகள் உள்ளிட்டவை குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் விளக்கினார். அதுமட்டுமின்றி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு வருகிற 28ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், இந்த சதுரங்க போட்டி குறித்து உலகெங்கும் உள்ள சதுரங்க ஆர்வலர்கள், போட்டியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தகவல்கள் பெறும் வகையில் பிரத்யேகமாக ஒரு இணையதளமும், செயலியும் உருவாக்கப்பட்டு வரும் விவரங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்திடும் வகையில், பல்வேறு நாடுகளில் இருந்து வரும் போட்டியாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் எவ்வித குறைபாடுமின்றி மேற்கொள்ள வேண்டுமென்றும், போட்டி நடைபெறும் மாமல்லபுரத்திற்கு தேவையான போக்குவரத்து வசதியும், பார்வையாளர்கள் எவ்வித சிரமமின்றி போட்டியை காண்பதற்கு தேவையான வசதிகளையும் செய்திட வேண்டுமென்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, நிதித்துறை செயலாளர் முருகானந்தம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலாளர் அபூர்வா, செஸ் ஒலிம்பியாட் சிறப்பு அலுவலர் தாரேஸ் அகமது, செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குனர் ஜெயசீலன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை செயல் அலுவலர் மற்றும் உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.