
20 ஆண்டுகளாக அரசுக்கு வைத்த கோரிக்கை- அமைச்சர் கீதாஜீவன் 19 பேருக்கு பட்டா வழங்கினார்
தமிழக அரசு பல்வேறு துறைகளின் கீழ் செயல்பட்டு வருகிறது. அதில் வருவாய் துறை முக்கியமான துறையாக விளங்கி வருகிறது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பல ஆண்டுகளாக அரசு இடங்களில் குடியிருப்பவர்களுக்கு மாவட்டத்தின் சூழ்நிலைகள் மற்றும் இடத்தின் தன்மை கருதி குடியிருப்பவர்களுக்கு அரசு சட்டதிட்ட விதிகளுக்குட்பட்டு பட்டா வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கயத்தாறு தாலுகா, காட்டுநாயக்கன்பட்டி அருகில் உள்ள எட்டுநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வீட்டுமனை பட்டா வேண்டி 20 ஆண்டுகளாக அரசுக்கு வைத்த கோரிக்கையை ஏற்று தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து 19 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாவை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
நிகழ்ச்சியில், தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி மண்டல தலைவர் வக்கீல் பாலகுருசாமி, பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட தகவல் தொழில்;நுட்ப அணி அமைப்பாளர் அபிராமி நாதன், மாநகர தொழிலாளர் அணி அமைப்பாளர் முருக இசக்கி, மாநகர திமுக துணைச் செயலாளரும், கவுன்சிலருமான கனகராஜ், மாநகர கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் அற்புதராஜ், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், பகுதி இளைஞரணி அமைப்பாளர் சூர்யா, கிராம நிர்வாக அலுவலர் அமல்ராஜ்,மற்றும் மணி, அல்பட், மாரிமுத்து, ராயப்பன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
பட்டா பெற்றுக்கொண்ட பெண்மணி ஒருவர் கூறுகையில்: எங்களது நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்து, எங்களது குடும்பத்தில் ஒளிவிளக்கேற்றி வைத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், எங்களை போன்ற நடுத்தர பெண்களுக்கு முன்னுதாரணமாக இருந்து செயல்படும் அமைச்சர் கீதாஜீவன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.