
திருச்செந்தூர் மற்றும் கோவில்பட்டி பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை கலந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்த 12 கடைகளுக்கு சீல்- உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை
சுகாதாரத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் (பொ) ஹரிஹரன், மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி அறிவுறுத்தலின்படி, காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணண் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.ச.மாரியப்பன் ஆகியோரது ஒருங்கிணைப்பில், காவல் துறையும், உணவு பாதுகாப்புத் துறையும் இணைந்து, பான்மசாலா மற்றும் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் விற்பனையைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது. அதனடிப்படையில், இரண்டு துறைகளும் இணைந்தும், தனித்தனியாகவும் கடைகளில் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுத்துவருகின்றனர். அதன்படி, நியமன அலுவலர் டாக்டர்.மாரியப்பன் அவர்களது உத்திரவின்படி,
இன்று (20.05.2024) கோவில்பட்டி நகராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளில், நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் ஜோதிபாஸூ மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் செல்லப்பாண்டி ஆகியோர் அவரவர் அதிகாரவரம்பிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றதா என்று ஆய்வு செய்தபோது, மரிய தாயம்மாள் என்பவருக்குச் சொந்தமான டீ ஸ்டால், முருகன் என்பவருக்குச் சொந்தமான டீ ஸ்டால் மற்றும் கனகராஜ் என்பவருக்குச் சொந்தமான சிவா பேக்கரி ஆகிய கடைகளில் தடை செய்யப்பட்ட உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறிந்ததையடுத்து, நியமன அலுவலரது உத்திரவின் கீழ், மேற்படி மூன்று கடைகளும் மூடி சீல் வைக்கப்பட்டு, அக்கடைகள் உணவு பாதுகாப்புத் துறையின் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டன.
மேலும், கடந்த வாரம் இருசக்கர வாகனத்தில் தடைசெய்யப்பட்ட உணவுப் பொருட்களைக் கடத்தி, காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான ஜேசுராஜ் என்பவருக்குச் சொந்தமான கோவில்பட்டி நகராட்சியில் உள்ள அமலி ஸ்டோர் என்ற கடையும் மூடி சீலிடப்பட்டது.
முன்னதாக, தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்ததாக, திருச்செந்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் மூலம் பெறப்பட்ட பரிந்துரையின்படி, 8 கடைகளை மூடி சீல் வைக்க மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் மாரியப்பன் உத்திரவிட்டதை அடுத்து, கடந்த வாரத்தில், பேபி செல்வகுமாரி என்பவருக்குச் சொந்தமான தனபால் ஸ்டோர், லிங்ககுமார் என்பவருக்குச் சொந்தமான லிங்கம் மளிகை, ராஜா என்பவருக்குச் சொந்தமான ராஜா ஸ்டோர், ஜெயக்குமார் என்பவருக்குச் சொந்தமான எஸ்.ஜே.கே ஸ்டோர், சரவணன் என்பவருக்குச் சொந்தமான சாந்தி ஸ்டோர், சரவணன் என்பவருக்குச் சொந்தமான பெட்டிக்கடை, சுரேஷ் மும்மூர்த்தி என்பவருக்குச் சொந்தமான செந்தில் முருகன் ஸ்டோர் மற்றும் வடிவேல் என்பவருக்குச் சொந்தமான பெட்டிக்கடை உள்ளிட்ட எட்டு கடைகளும் உணவு பாதுகாப்பு அலுவலர்களால் மூடி, சீல் வைக்கப்பட்டு, அக்கடைகளும் உணவு பாதுகாப்புத் துறையின் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டன.
மேற்படி, அனைத்து கடைகளின் உரிமையாளர்களிடம் விசாரணை நிறைவுற்ற பின்னர், உணவு பாதுகாப்புத் துறை சார்ந்த குற்றத்தை உறுதி செய்து, நியமன அலுவலரால் அபராதம் விதித்து உத்திரவிடப்படும். சம்பந்தப்பட்ட வணிகர்கள் விதிக்கப்பட்ட அபராதத்தினை கருவூலத் துறையின் இணையதளம் மூலமாக செலுத்தி, அதற்கான சலான் நகலை நியமன அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பித்த பின்னரே, கடைகள் மீண்டும் திறக்கப்படும். தவறினால், அபராதம் செலுத்தும் காலம் வரை கடைகள் மூடி, சீல் வைத்த நிலையிலேயே இருக்கும்.
காவல் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்களின் ஆய்வின் போது, உணவு வணிகர்கள் எவரேனும் பான்மசாலா, குட்கா, பதப்படுத்தப்பட்ட மெல்லும் புகையிலை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை அல்லது நிகோட்டின் கலந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், கடையானது உடனடியாக மூடி சீல் வைக்கப்படும் என எச்சரிக்கப்படுகின்றது. ஒரு பாக்கெட் இருந்தாலும் அக்கடை மூடி சீலிடப்படும் என்றும், இந்த விடயத்தில் எந்த வணிகருக்கும் கருணையோ அல்லது சலுகையோ காண்பிக்கப்படமாட்டாது என்றும் திட்டவட்டமாக அறிவிக்கப்படுகின்றது.
பொதுமக்கள் தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் விற்பனை குறித்தோ அல்லது அதை விற்கும் கடைகள் குறித்தோ புகார் அளிக்க விரும்பினால், 9444042322 என்ற மாநில வாட்ஸ்அப் புகார் எண்ணிற்கோ அல்லது https://foodsafety.tn.gov.in என்ற இணையளத்தி்ற்கோ அல்லது TN Food Safety என்ற செயலிற்கோ அனுப்பலாம். புகாரைப் பெற்றவுடன் உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை அளிக்கப்படும். மேலும், புகார் அளிப்பவரது விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்..