
முறப்பநாடு கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை – தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல் நிலைய கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்-II நீதிபதி கனம் உதயவேலன் ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 5000/- அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கை சிறப்பாக புலன் விசாரணை செய்த காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பாராட்டியுள்ளார்.
கடந்த 21.01.2016 அன்று தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மருதூர் அணைக்கட்டு அருகே வைத்து திருநெல்வேலி மாவட்டம் மருதூர் கீழத் தெருவைச் சேர்ந்த வேல் (எ) ஆறுமுகம் மகன் கல்யாணி (40) என்பவரை கொலை செய்த வழக்கில் அவரது உறவினரான திருநெல்வேலி மாவட்டம் மருதூர் கீழத் தெருவைச் சேர்ந்த ஆண்டியா மகன் கனி (எ) ஆறுமுக கனி (32) என்பவரை முறப்பநாடு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கை அப்போதைய முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் ஜோன்ஸ் புலன் விசாரணை செய்து கடந்த 15.03.2016 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்-II ல் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய கனம் நீதிபதி உதயவேலன் இன்று (13.06.2024) குற்றவாளியான கனி (எ) ஆறுமுக கனி என்பவருக்கு இந்திய தண்டனைச் சட்டம் 302 பிரிவின் படி ஆயுள் தண்டனை ரூபாய் 5000/- அபராதமும், இந்திய தண்டனைச் சட்டம் 506(2) பிரிவின் படி 7 ஆண்டுகள் சிறை தண்டனை ரூபாய் 5000/- அபராதமும் விதித்து ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் ஜோன்ஸ் மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம் மற்றும் விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை காவலர் கார்த்திகேயன் ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்