
கோவில்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது – ரூபாய் 75,000/- மதிப்புள்ள இருசக்கர வாகனம் மீட்பு
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பட்டி திருமலை நகர் பகுதியைச் சேர்ந்த இசக்கி மகான் ராஜேந்திரன் (62) என்பவர் நேற்று (13.06.2024 ) தனது வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சிறிது நேரம் கழித்து வந்து பார்க்கும்போது அவரது இருசக்கர வாகனம் திருடு போனது.
இதுகுறித்து ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், கோவில்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்த காந்தாரி மகன் கனகராஜ் (38) என்பவர் ராஜேந்திரனின் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் நீதிவேந்தன் மற்றும் போலீசார் கனகராஜை கைது செய்து அவரிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 75,000/ மதிப்புள்ள இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர் மேலும் இது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.