
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த கோவில்பட்டி மாரியப்பன் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்த கோவில்பட்டி வானரமுட்டி சேர்ந்த மாரியப்பன் உடல் (14/06/2024) வெள்ளிக்கிழமை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
குவைத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்தனர். இதில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்த வீராச்சாமி மகன் மாரியப்பனும் ஒருவர். குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் விமான மூலம் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தது. அங்கிருந்து தமிழக அரசின் சார்பில் ஆம்புலன்ஸ் மூலமாக அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பனின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
தொடர்ந்து அவரது உடலுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டிபாய், வட்டாட்சியர் சரவணப் பெருமாள், கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கா. கருணாநிதி, வருவாய் ஆய்வாளர் ராஜசேகரன், கிராம நிர்வாக அலுவலர் அபிராமி சுந்தரி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜகோபால், முத்துராமலிங்கம், அதிமுக நிர்வாகிகள் அலங்கார பாண்டியன், பழனிக்குமார் மற்றும் அண்ணாதுரை, அரசியல் கட்சியினர் , ஊர் மக்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து, அவரது உடல் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஊராட்சி மன்ற நிர்வாகிகள், அரசியல் கட்சியினர்,கிராம மக்கள், உறவினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவரது உடலுக்கு மகன் கதிர்நிலவன் சிதைக்கு தீ மூட்டினார்.
செய்தியாளர்: கோவில்பட்டி முத்துக்குமார்