
தூத்துக்குடியில் 5ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி- மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி, ஜூன் 24:
தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை மேயர் ஜெகன் பெரியசாமி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாநகர் பகுதிகளை பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒரே நாளில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. இப்பணியின் தொடக்க நிகழ்ச்சி தூத்துக்குடி அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள ஸ்டெம் பார்க்கில் நடைபெற்றது. இப்பணியினை மேயர் ஜெகன் பெரியசாமி மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தூத்துக்குடி மாநகர் பகுதியை பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக சுகாதாரமான காற்று மக்களுக்கு கிடைக்கும். எனவே, மாநகராட்சிக்குள்பட்ட பூங்காக்கள், பள்ளிகள் உள்ளிட்டவற்றில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. ஸ்டெம் பார்க்கில் நீர்மருது, புங்கை, வேம்பு, ஈட்டி, நாவல், வேங்கை உள்ளிட்ட 6 வகையான மரங்கள் நடப்படுகிறன்றன என்றார்.
இந்நிகழ்வில், மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், வடக்கு மண்டலத் தலைவர் நிர்மல்ராஜ், மாநகராட்சி நகர் நல அலுவலர் தினேஷ், சுகாதார ஆய்வாளர் ஹரிகணேஷ், சுகாதார பணிக்குழு தலைவர் சுரேஷ்குமார், கணக்குக்குழு தலைவர் ரெங்கசாமி, மாமன்ற உறுப்பினர்கள் நாகேஸ்வரி, ஜெயசீலி, தெய்வேந்திரன், அந்தோணி பிரகாஷ் மார்சலின் உள்பட பலர் பங்கேற்றனர்.