
தூத்துக்குடியில் கல்லூரி அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவர் கைது – 3 கிலோ 500 கிராம் கஞ்சா பறிமுதல்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) பொன்னரசு மேற்பார்வையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் தலைமையில் சார்பு ஆய்வாளர் ஆர்தர் ஜஸ்டின் சாமுவேல் ராஜ் மற்றும் தெர்மல்நகர் காவல் நிலைய முதல் நிலை காவலர் மகாலிங்கம், மத்தியபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் செந்தில், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சாமுவேல், காவலர் முத்துப்பாண்டி, தென்பாகம் காவல் நிலைய காவலர் திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தூத்துக்குடி நகர உட்கோட்ட தனிப்படை போலீசார் நேற்று (01.07.2024) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி அன்னம்மாள் கல்லூரி ஜங்ஷன் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் தூத்துக்குடி திருச்செந்தூர் ரோடு ராஜபாண்டி நகரைச் சேர்ந்த கருப்பசாமி மகன் சரோஜ்குமார் (24) என்பதும் அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் கடத்தியதும் தெரியவந்தது.
உடனே போலீசார் எதிரியான சரோஜ்குமாரை கைது செய்து அவரிடமிருந்த 3 கிலோ 500 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.