
பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் ரூபாய் 29,523 வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம் பேயன்விளையைச் சார்ந்த ஓய்வு பெற்ற இடை நிலை ஆசிரியர் செல்லம்மாள் என்பவர் தமிழ்நாடு அரசின் குடும்ப ஓய்வூதியர்களுக்கான ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் பாலிசி எடுத்திருந்தார். அதன் பின்னர் அவரது கணவர் சௌமிய நாராயணன் உடல் நிலைக் குறைவு ஏற்பட்டதால் காயல்பட்டினத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அங்கு சிகிச்சைக்காக பணம் செலுத்தியுள்ளார்.
அதன் பின்னர் சௌமிய நாராயணன் இறந்து விட்டார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக செலுத்திய பணத்தை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் காப்பீடு செய்ததன் அடிப்படையில் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் இன்சூரன்ஸ் நிறுவனம் சரியான காரணங்களை கூறாமல் சிகிச்சைக்காக செலுத்தப்பட்ட பணத்தை தர மறுத்துள்ளது.
இதைக் கண்ட புகார்தாரர் அதிர்ச்சியும், தாங்க முடியாத வேதனையும் அடைந்து உடனடியாக வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோர் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் சிகிச்சைக்காக செலுத்தப்பட்ட தொகை ரூபாய் 9,523 சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 10,000, வழக்கு செலவுத் தொகை ரூபாய் 10,000 ஆக மொத்தம் ரூபாய் 29,523 ஐ இரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்திரவிட்டனர்