Breaking News
நடிகை பாவனாவைக் கடத்தி பாலியல் துன்புறுத்தல்: கார் ஓட்டுநர் கைது!

நடிகை பாவனா மர்மக் கும்பலால் காரில் கடத்தப்படு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார். இதையடுத்து அவருடைய கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ், மலையாளப் படங்களில் நடித்துப் புகழ்பெற்ற நடிகை பாவனா நேற்று இரவு படப்பிடிப்பு முடித்து கொச்சியிலிருந்து திருச்சூருக்குத் திரும்பிவந்துகொண்டிருந்தார். எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த அங்காமலி அருகே உள்ள அதானிப் பகுதியில் அவர் கார் வந்துகொண்டிருந்தபோது மர்மக் கும்பல் ஒன்று காரை வழிமறித்தது. வேனில் வந்த அந்தக் கும்பல் பாவனாவின் காரை மோதியது. அந்தச் சூழலைப் பயன்படுத்தி பாவனாவின் காருக்குள் புகுந்தது மர்மக் கும்பல்.

ஓட்டுநர் மார்டினைத் தாக்கி வெளியேற்றி, எதிர்பாராதவிதமாக பாவனாவை அதே காரில் வைத்து கடத்தியது. ஒன்றை மணி நேரம் காரில் பாவனாவுக்குப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் அளித்தது. பலரிவட்டோம் என்கிற இடம் வருகிறவரை இந்தத் தொல்லை நீடித்துள்ளது. கூடுதலாக பாவனாவைப் புகைப்படம் எடுத்தும் வீடியோவில் பதிவு செய்தும் அத்துமீறல் நிகழ்த்தப்பட்டது. பிறகு காரில் இருந்து இறங்கி மற்றொரு காரில் ஏறி தப்பிச் சென்றுள்ளது அந்தக் கும்பல்.

இதையடுத்து காகாநாடில் உள்ள ஓர் இயக்குநரின் வீட்டுக்குத் தானே காரை ஓட்டிச் சென்று உதவி கோரியுள்ளார் பாவானா. பிறகு இச்சம்பவம் குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. பாவனாவின் முன்னாள் கார் ஓட்டுநர் சுனில் குமார் அந்தக் கும்பலில் இருந்து காருக்குள் நுழைந்ததாக பாவனா கூறியுள்ளார். மேலும் தற்போது தனக்கு ஓட்டுநராக உள்ள மார்டினுக்கும் இச்சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக அவர் புகார் அளித்ததையடுத்து கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல நடிகைக்கு நேர்ந்த இச்சம்பவத்தால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.