Breaking News
கார்த்தி சிதம்பரம் மோசடி: சாமி ‛பகீர்’

‛‛முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், மூத்த காங்., தலைவருமான சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், 21 வெளிநாட்டு வங்கி கணக்குகளை முறைகேடாக பயன்படுத்தி வருகிறார்,” என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார்.டில்லியில், இன்று சுப்ரமணியன் சாமி நிருபர்களிடம் கூறியதாவது:

21 வங்கி கணக்குகள்

கார்த்தி சிதம்பரம் மற்றும் அவர் நடத்தி வரும் நிறுவனங்கள், 21 வெளிநாட்டு வங்கி கணக்குகளை முறைகேடாக பயன்படுத்தி வருகின்றனர். இது குறித்த தகவல்களை அவர்கள், வருமான வரித்துறை அதிகாரிகளிடம் இதுவரை தெரிவித்தது இல்லை.

மொனாகோவில் உள்ள பர்கலேஸ் வங்கி, பிரிட்டனில் உள்ள மெட்ரோ வங்கி, சிங்கப்பூரில் உள்ள ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கி, சிங்கப்பூரில் உள்ள ஓ.சி.பி.சி., வங்கி, பிரிட்டனில் உள்ள எச்.எஸ்.பி.சி., வங்கி, பிரான்சில் உள்ள டாய்சி வங்கி, ஸ்விஸ் நாட்டில் உள்ள யு.பி.எஸ்., வங்கி, கலிபோர்னியாவில் உள்ளள வெலஸ் பார்கோ வங்கி ஆகிய வங்கிகளில், இந்த வங்கி கணக்குகள் உள்ளன.

நெருக்கடி உள்ளது
ஆனால், கடந்த, எட்டு மாதங்களாக, சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் இந்த விஷயம் தொடர்பாக, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய நிதித்துறையில் உள்ள சிதம்பரத்தின் நண்பர்கள் அளிக்கும் நெருக்கடியே, நடவடிக்கை எடுக்காததற்கு காரணம். சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் தான், இந்த வங்கி கணக்கு விவரங்களை கடந்த வாரம் என்னிடம் அளித்தார். சென்னை மற்றும் டில்லியில் இருக்கும் ஊழல் மையங்கள் ஏற்படுத்தி வரும் கடுமையான நெருக்கடிகளையும் அவர் எடுத்து கூறினார்.

பிரிட்டனில் உள்ள மெட்ரோ வங்கியில், 16714313 என்ற வங்கி கணக்கு தான் கார்த்தி சிதம்பரத்தின் தனிப்பட்ட வங்கி கணக்கு. ஆனால், வருமான வரித்துறையிடம், ஆண்டு இறுதியில் சமர்பிக்கப்படும் கணக்கில், இந்த வங்கி கணக்கு இடம் பெறவில்லை. இந்த வங்கி கணக்கை ரகசியமாக பல ஆண்டுகளாக அவர் நடத்தி வருகிறார்.

கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் காங்., வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால், தேர்தல் ஆணையத்தில் சமர்பித்த சொத்து விவரங்களில், இந்த வங்கி கணக்கு விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.

சில பா.ஜ., தலைவர்கள்
ஏர்செல் – மேக்சிஸ் முறைகேடு வழக்கில், சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் மீது, சி.பி.ஐ.,யும், அமலாக்க துறையும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. சில, பா.ஜ., தலைவர்கள் அவர்களை காப்பாற்றுவதற்காக சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தை நீர்த்து போக வைக்க முயற்சி எடுத்து வருகின்றனர்.

இவ்வாறு சுப்ரமணியன் சாமி கூறினார்.

நன்றி : தினமலர்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.