Breaking News
பார்வையற்றோர் உலகக் கோப்பை வெற்றி: பிரதமர் மோடியுடன் இந்திய கிரிக்கெட் அணியினர் சந்திப்பு

பார்வையற்றோர் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியினர் பிரதமர் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்தனர்.
இந்திய அணியினரை சந்தித்த பிரதமர் மோடி, அவர்களில் ஒவ்வொரு வீரருடனும் தனித்தனியே புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன், அதை தனது சுட்டுரைக் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
பார்வையற்றோர் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வென்ற இந்திய அணியினருடனான உரையாடல் மகிழ்ச்சியளிப்பதாகவும், நினைவில் நிற்கும்படியாகவும் இருந்தது.
கோப்பையை வென்ற அணியினருக்கு வாழ்த்துகள். தொடர்ந்து இதேபோன்று நன்றாக விளையாடி, கிரிக்கெட்டில் இந்தியாவிக்கு அவர்கள் பெருமை தேடித் தர வேண்டும். இந்திய அணியினரின் இத்தகைய மறக்க முடியாத பயணத்தின்போது அவர்களுக்கு ஆதரவாக இருந்த, பயிற்சியாளர்கள், பெற்றோர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் என அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
பார்வையற்றோருக்கான உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில், நடப்புச் சாம்பியனான இந்திய அணி பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெற்ற இறுதிச்சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தி தொடர்ந்து 2-ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.