Breaking News
ஒரு நடிகரின் வாழ்க்கை அவ்வளவு சுவாரசியமானதல்ல: விஜய் சேதுபதி

ஒரு நடிகரின் வாழ்க்கை அவ்வளவு சுவாரசியமானதல்ல என்று ‘கவண்’ படத்துக்காக அளித்துள்ள பேட்டியில் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர், மடோனா செபஸ்டின் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கவண்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் மார்ச் 31-ம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் விஜய் சேதுபதி அளித்துள்ள பேட்டியில் “நானும் ரவுடி தான் படத்தில் உங்கள் மகன் நடித்தார். தொடர்ந்து நடிப்பாரா?” என்ற கேள்விக்கு, “ஒரு தந்தையாக அவரை நான் நன்றாக வளர்க்க வேண்டும். குழந்தைத் தனத்தை சினிமா ஆசையினால் தொலைத்துவிட வேண்டாம் என அவருக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறேன். அவர் ஒரு நடிகனாவதை விட, பள்ளி ஆசிரியராக மாற முடிவெடுத்தால் உண்மையில் மகிழ்ச்சியடைவேன். தனது வாழ்க்கையை நிறைய ஓய்வு நேரத்துடன் அவர் கொண்டாடலாம்.

ஒரு நடிகரின் வாழ்க்கை அவ்வளவு சுவாரசியமானதல்ல. அதை நான் தினமும் அனுபவிக்கிறேன். வாழ்க்கை வெற்றி மற்றும் வெற்றிக்கு பின்னால் ஓடுவது மட்டுமல்ல. நாம் சந்தோஷமாக இருக்கிறோமா, இல்லையா என்பதுதான் முக்கியம்.

நான் என் மகனுக்கு வாழ்க்கையென்றால் என்ன என்பதை சொல்லித்தர வேண்டும். வாழ்க்கையில் சிறிய சந்தோஷங்களை அனுபவிக்க வேண்டும் என அவரிடம் சொல்லுவேன். அது பள்ளிக்கு தாமதமாக செல்வதில் இருக்கும் சந்தோஷமாக இருந்தாலும் சரி” என்று தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.