Breaking News
மைதா! அதிர்ச்சியூட்டும் உண்மைகள்

‘கோதுமையில் உள்ள நார்ச்சத்துகளை அகற்றியே மைதா மாவு தயாரிக்கப்படுகிறது. இந்த மைதா மாவில் பல ஆபத்தான ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது. குறிப்பாக, அலொக்ஸான் என்ற ரசாயனம் அதிகம் கலக்கப்படுகிறது. இதனால், இன்சுலின் சுரப்பது தடுக்கப்பட்டு ஏராளமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தெரிந்து கொண்டுதான் மைதாவுக்கு அமெரிக்கா போன்ற நாடுகள் தடை விதித்துள்ளன. எதிர்காலத்தில் இன்னும் பலர் பாதிக்கப்படாமல் இருக்க மைதாவுக்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த கே.ராஜேந்திரன்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் மற்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில்தான் மைதாவுக்குத் தடை விதிப்பது பற்றித் தீர்ப்பளித்திருக்கிறார்கள்.

‘மனுதாரர் கொடுத்த புகாரின் அடிப்படையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டுத்துறை ஆணையர் ஆய்வுகளையும் விசாரணைகளையும் மேற்கொள்ள வேண்டும். மனுதாரரின் குற்றச்சாட்டில் உண்மை இருப்பது தெரியவந்தால், மைதாவுக்குத் தடை விதிக்க சட்டப்படியான நடவடிக்கைகளை 3 மாதங்களுக்குள் மேற்கொள்ள வேண்டும்’ என்று உத்தரவிட்டிருக்கிறார்கள்.மைதா உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்று நீண்ட நாட்களாகவே மருத்துவர்கள் அறிவுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், இன்னும் பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது இந்த தீர்ப்பு. மைதா உணவுகள் ஆபத்தானவை என்று மருத்துவர்கள் சொல்வது ஏன்? நீரிழிவு சிறப்பு மருத்துவரான பரணீதரன் கூறியதாவது:
எல்லா உணவிலும் மாவுச்சத்து, புரதச்சத்து மற்றும் கொழுப்புச்சத்து என அடிப்படை யான மூன்று விஷயங்கள் இருக்கின்றன. நாம் சாப்பிடும் உணவில் இருந்து எந்த அளவு குளுக்கோஸ் வெளியாகிறது, அதில் எந்த அளவு சக்தியாக மாற்றப்படுகிறது என்பதை க்ளைசெமிக் இன்டெக்ஸ் என்று அளக்கிறோம். இந்த அளவு மைதாவில் மிகவும் அதிகமாக இருக்கிறது. மைதா உணவினால் கிடைக்கும் அதீத குளுக்கோஸ் அளவை சமன்படுத்தும் அளவு உடலுக்கு இன்சுலின் உற்பத்தித்திறன் இருக்காது. ஆரம்பகட்டத்தில் தன் சக்திக்கு மீறி அதிக இன்சுலினை உற்பத்தி செய்ய வேண்டும் என்று கணையம் போராடினாலும், நாளடைவில் சோர்ந்து போய்விடும்.

நம் உணவில் இருக்கும் கார்போஹைட்ரேட், குளுக்கோஸாக மாறி ரத்தத்தில் கலந்து செல்களுக்குச் செல்ல வேண்டும். அப்போதுதான் நமக்கு ஆற்றல் கிடைக்கும். கணையத்தில் பீட்டா செல்களால் உற்பத்தி செய்யப்படும் இன்சுலின்தான் ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸை இதுபோல செல்களுக்குக் கொண்டு செல்கிறது. ஆக்சிடேசன் என்கிற இந்த செயலி–்னால் கிடைக்கும் ஆற்றலின் அளவுக்கு நம் உடல் செயல்பாடுகள் இருக்கும்பட்சத்தில் ரத்தத்தில் சர்க்கரை அளவு இயல்பான நிலையில் பராமரிக்கப்படும். இன்சுலின் போதுமான அளவு சுரக்காதபட்சத்தில் குளுக்கோஸ் செல்களுக்குச் செல்லாமல் ரத்தத்திலேயே தங்கிவிடும். இதுதான் நீரிழிவு நோய்.

மைதா மாவில் பல ரசாயனங்களைச் சேர்க்கிறார்கள். முக்கியமாக, மைதா மாவில் அலொக்ஸான் என்கிற ரசாயனம் சேர்க்கிறார்கள். இந்த ரசாயனம் சேர்த்தால்தான் உணவாகப் பயன்படுத்தப்படுகிற அளவுக்கு மிருதுவாகவும், சுவையான உணவாகவும் மைதா மாறும். இந்த ரசாயனத்தால் செரிமானக்கோளாறு, எதுக்களித்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.அதேபோல பென்சாயில் பெராக்ஸைடு என்ற ரசாயனம் மைதாவின் வெண்மை நிறத்துக்காக சேர்க்கிறார்கள். இந்த ரசாயனம் ஜவுளித்துறையில் துணிகள் வெண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காகப் பயன்படுத்தப்படுவது என்பது அதிர்ச்சியூட்டும் தகவல்.மைதாவை தவிர்த்து விட்டால் மாற்று இல்லையா? மைதா பிரெட்டுக்குப் பதிலாக கோதுமை பிரெட் சாப்பிடலாம். பீட்சாவுக்குப் பதிலாகக் காய்கறிகள் நிறைந்த சாண்ட்விச் சாப்பிடலாம். சுண்டல், வேர்க்கடலை என நம்முடைய இயற்கையான, பாரம்பரிய உணவுகள் எக்கச்சக்கமாக இருக்கின்றன. இவை எப்போதும் பாதுகாப்பானவை. ஏற்கெனவே, அரிசி உணவின் பயன்பாடு நம் நாட்டில் அதிகம் இருக்கிறது. இதனுடன் மைதா உணவுகளும் அதிகம் சாப்பிடும்போது ரிஸ்க் இன்னும் அதிகமாகிவிடுகிறது. இதில் நம் உடல் உழைப்புக்கு எந்த அளவு சாப்பிட வேண்டும் என்பது தெரியாமலேயே அதிக கலோரி சத்து உணவுகள் எடுத்துக்கொள்கிற தவறான பழக்கத்தாலும் நீரிழிவு ஏற்படுகிறது.

ஊட்டச்சத்து நிபுணர் சுப்ரியா கூறும் கருத்துகள்: பீட்சா, பர்கர், புரோட்டா, சோலா பூரி, பாஸ்தா, நாண், பிஸ்கெட், கேக், சமோசா, வட இந்தியர் உட்கொள்ளும் கச்சோரி, ருமாலி ரொட்டி என மைதாவில் தயார் செய்யப்படும் உணவுப்பொருட்களை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், மாவுச்சத்து அதிக அளவில் உடலில் தங்கி விடும். தேவைக்கு அதிகமான மாவுச்சத்து கெட்ட கொழுப்பாக மாறிவிடும். மைதா உணவுகள் பெரும்பாலானவற்றில் எண்ணெய் பயன்படுத்தப்பட்டிருக்கும். இதன் காரணமாகவும் கொழுப்பு அதிகரித்து பருமன் ஏற்படும். எடை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மைதாவால் தயாரிக்கப்படும் எந்த உணவுப் பொருட்களையும் உட்கொள்ளக் கூடாது. மைதா உணவுகளைத் தொடர்ச்சியாகச் சாப்பிடுகிறவர்களுக்கு பெப்டிக் அல்சர், பித்தப்பைக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. நமது உடலில் 150 மில்லிகிராம் அளவுக்கு மேல் கெட்ட கொழுப்பு இருப்பது ஆபத்தானது. மைதாவில் இருக்கும் கெட்ட கொழுப்பு உடலில் அதிகம் தங்கும் போது ரத்தநாளங்களில் அடைப்பு ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. இதனால் மாரடைப்பு மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயமும் உண்டு. நார்ச்சத்து அறவே நீக்கப்பட்ட மைதா உணவுப்பொருட்களை அதிகம் உட்கொள்ளும்போது நார்ச்சத்து பற்றாக்குறை ஏற்படும். இதனால் மலச்சிக்கல், ஆசனவாய்ப் புற்றுநோய் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. இந்தப் புற்றுநோய் சிவப்பு இறைச்சி மற்றும் மைதா சாப்பிடுகிறவர்களுக்கே அதிக அளவில் ஏற்படுகிறது.

ரசாயன நச்சுக் குப்பை: மைதாவில் சேர்க்கப்படும் ரசாயனங்களின் தன்மை குறித்து கரிமவேதியியல் பேராசிரியர் விஜயகுமார் கூறுகையில்,‘மைதாவில் சேர்க்கப்படும் பென்சாயி–்ல் பெராக்சைடின் முக்கியப் பயன்பாடு அதை வெண்மையாக்குவதுதான். காலில் ஆணி ஏற்பட்டால் அதை குணப்படுத்துவதற்காகவும், பொருட்களை பளபளப்பாக்குவதற்கும் இந்த பென்சாயி–்ல் பெராக்சைடு பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ரத்தத்தில் ‘ப்ரீ ரேடிக்கல்ஸ்’ என்ற நச்சுக்குப்பைகளை உருவாக்குவதால் ஆக்சிஜன் உடைந்து செல்களில் பாதிப்பு ஏற்படும். அலொக்ஸான் எனும் ரசாயனத்தை எலிக்குக் கொடுத்து பரிசோதித்தபோது இன்சுலின் உற்பத்திக்கு ஆதாரமாக இருக்கக் கூடிய பீட்டா செல்களை தாக்கி நீரிழிவை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டது. இது அதிக அளவில் உடலில் தங்கும்போது கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்படும் என்பது ஆராய்ச்சியில் நிரூபணமாகி உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.