ரயிலில் குண்டு வெடித்து ரஷ்யாவில் 10 பேர் பலி
செயின்ட்பீட்டர்ஸ்பர்க்: ரஷ்யாவின் இரண்டாவது பெரிய நகரமான, செயின்ட்பீட்டர்ஸ்பர்க்கில், மெட்ரோ ரயிலில் நிகழ்ந்த பயங்கர குண்டு வெடிப்பில், 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ரஷ்யாவின், இரண்டாவது பெரிய நகரமாக, செயின்ட்பீட்டர்ஸ்பர்க் திகழ்கிறது. இந்த நகரின் முக்கிய போக்குவரத்து முறைகளில் ஒன்றாக, மெட்ரோ ரயில் உள்ளது. மெட்ரோ ரயிலின் பெட்டி ஒன்றில், நேற்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில், குறைந்தது, 10 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்; மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.குண்டு வெடிப்பை தொடர்ந்து, இரண்டு ரயில்வே ஸ்டேஷன்கள் மூடப்பட்டுள்ளன. சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு, தீவிர சோதனைகள் நடந்து வருகின்றன. குண்டு வெடிப்பு நிகழ்ந்த ரயிலில் இருந்து, பயணிகளை மீட்கும் பணிகளும் தீவிரமாக நடக்கின்றன.விபத்தில் உயிரிழந்த பயணிகளுக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த குண்டு வெடிப்பில், பயங்கரவாதிகளுக்கு தொடர்புள்ளதா என்பது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.