லாரிகள் வேலைநிறுத்தம் 6-வது நாளாக தொடர்கிறது – டேங்கர் லாரிகள் இயங்கத் தொடங்கின
லாரி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்பட்டுள்ளதாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்தார். டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப் பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி உயர்வு, பர்மிட் கட்டண உயர்வை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, லாரி உரிமையாளர்கள் 5-வது நாளாக நேற்றும் வேலைநிறுத்தத்தில் ஈடு பட்டனர். தமிழகத்தில் இதனால் பல ஆயிரம் கோடி வர்த்தகம் பாதித்தது.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் எம்.ஆர்.குமாரசாமி தலைமையில் நிர்வாகிகள் நேற்று 2-ம் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமுக முடிவு எட்டப்பட்டது.
இதுகுறித்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியபோது, ‘‘தமிழக லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை முதல்வரிடம் தெரிவித்து, சுமுகமாக பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு முடிவு கண் டுள்ளோம். 80 கி.மீ. வேகத்துக்கு குறைவாக செல்லும் வாகனங்க ளுக்கு வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்தக் கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட கருவி தயாரிக்கும் நிறுவனங் களுடன் பேசி 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளோம்.
புதிய வாகனங்களுக்கு பதிவுக் கட்டணம், புதுப்பித்தலுக்கான கால தாமதக் கட்டணம், எச்பி இணைப்பு கட்டணம் குறைக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். அதை நிறைவேற்றித் தர உள்ளோம். பெட்ரோல், டீசல் விலை குறைப்பு என்பது அரசின் கொள்கை முடிவு. இப்போதும் தமிழகத்தில்தான் விலை குறைவு. அதை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்’’ என்றார்.
மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் எம்.ஆர். குமாரசாமி கூறியபோது, ‘‘தமிழக அளவிலான கோரிக்கை கள் தொடர்பாக சுமுக தீர்வு எட்டப்பட்டுள்ளது’’ என்றார்.
ஹைதராபாத்தில் பேச்சு
தமிழ்நாடு டேங்கர் லாரிகள் உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் கார்த்திக் கூறியபோது, ‘‘லாரி உரிமையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து 3-ம் தேதி (நேற்று) ஒருநாள் வேலைநிறுத்தத் தில் ஈடுபட்டோம். தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்று, இயக்கத் தொடங்கியுள்ளோம்’’ என்றார்.
தென்னிந்திய லாரி உரிமை யாளர்கள் சங்க மூத்த நிர்வாகி கோபால் நாயுடு கூறியபோது, ‘‘காப்பீடு கட்டணம், சுங்கக் கட்டணம் உயர்வு குறித்து ஹைதராபாத்தில் மத்திய அரசு அதிகாரிகளுடன் பேச்சு நடந்துவருகிறது. அதில் முன்னேற்றம் ஏற்படாததால் தென் னிந்திய அளவில் போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை’’ என்றார்.