Breaking News
ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் பொதுமக்கள் மண்டியிட்டு போராட்டம்

ஆலங்குடி அருகே நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக 12வது நாளான நேற்று, பொதுமக்கள் மண்டியிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 12-ம் தேதியன்று 2வது கட்ட போராட்டத்தை பொதுமக்கள் தொடங்கினர். நேற்று 12வது நாளாக நடந்த போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷமிட்டனர். மேலும், மாணவர்கள், பொதுமக்கள் மண்டியிட்டு தங்களது எதிர்ப்பு காட்டினார்கள்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், `நாங்கள் 2-ம் கட்டமாக 12 நாட்களாக போராடி வருகிறோம். ஆனால் மத்திய, மாநில அரசுகள் இதுவரை செவிசாய்க்கவே இல்லை. விளைநிலத்தையும் விவசாயத்தையும் பாதிக்கும் இத்திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். இல்லையெனில், இனிவரும் நாட்களில் எங்கள் போராட்டத்தின் தன்மை அதிகரிக்கும்’ என்று எச்சரித்தனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.