Breaking News
அக்னி நட்சத்திரம் 4-ந்தேதி தொடங்குகிறது 25 நாட்கள் வெயில் வாட்டி வதைக்கும்

தமிழகத்தில் தற்போது வெயில் கடுமையாக இருக்கிறது. வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதாலும், தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் தமிழகத்தில் வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுகிறது. கோடைமழை வெயிலின் தாக்கத்தை குறைக்கும் என்று எதிர்பார்த்திருந்த பொதுமக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இந்த நிலையில், அக்னி நட்சத்திரம் எனப்படும் ‘கத்திரி வெயில்’ வருகிற 4-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது. 28-ந்தேதி அக்னி நட்சத்திரம் முடிகிறது. இந்த 25 நாட்களும் வெயில் வாட்டி வதைக்கும். அனல் காற்று வீசும்.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

அனல்காற்று

அக்னி நட்சத்திரம் 4-ந்தேதி தொடங்குகிறது. அக்னி நட்சத்திர நாட்களில் அனல் காற்று அதிகமாக வீசும். மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் இருந்து அனல்காற்று வீசத்தொடங்கும். இப்போது உள்ள நிலவரப்படி, கடல் பகுதி, நிலப்பகுதிகளில் இருந்து காற்று அதிக அளவில் வீசுகிறது. இன்னும் 2 நாட்களில் அனல் காற்று வீசுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும்.

மழை அளவு

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

நெல்லை மாவட்டம் செங்கோட்டை 2 செ.மீ., கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், நீலகிரி மாவட்டம் கேத்தி, கோவை மாவட்டம் வால்பாறை ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ. மழை பெய்து உள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.