Breaking News
ரூ.600 கோடி பினாமி சொத்துகள் ஜப்தி வருமான வரி சோதனையில் நடவடிக்கை

‘பினாமி சொத்துகள் பரிமாற்ற (தடை) திருத்த சட்டம், 2016’ என்ற பெயரில் மத்திய அரசு ஒரு சட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் கடந்த நவம்பர் மாதம் 1–ந் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்த சட்டம், பினாமி பெயரில் சொத்துகள் வாங்கினால், 7 ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்க வகை செய்துள்ளது.

அதிரடி சோதனைகள்

இந்த சட்டத்தை அமல்படுத்தி தீவிர நடவடிக்கை எடுப்பதற்காக வருமான வரித்துறை நாடு முழுவதும், 24 பினாமி தடை சிறப்பு பிரிவுகளை அமைத்துள்ளது.

இந்த பிரிவினர் கொல்கத்தா, மும்பை, டெல்லி நகரங்களிலும், குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களிலும் அதிரடி சோதனை நடவடிக்கைகளை நடத்தி உள்ளனர்.

400 பினாமி சொத்து பரிமாற்றங்கள்

இந்த சோதனை முடிவுகள் குறித்து வருமான வரித்துறை சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:–

* மே மாதம் 23–ந் தேதி வரை நடத்தப்பட்ட சோதனைகளில் 400 பினாமி சொத்து பரிமாற்றங்கள் நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் வங்கிக்கணக்குகள், மனைகள், அடுக்குமாடி வீடுகள், நகைகள் அடங்கும்.

* 240 சோதனைகளில், சட்டப்படி ரூ.600 கோடி மதிப்பிலான சொத்துகள் தற்காலிகமாக ஜப்தி செய்யப்பட்டுள்ளன.

* கொல்கத்தா, மும்பை, டெல்லி, குஜராத், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் நடத்தப்பட்ட 40 சோதனைகளின் மூலம் மட்டுமே ரூ.530 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் ஜப்தி செய்யப்பட்டுள்ளன.

* ஊழல் செய்து கருப்பு பணம் சம்பாதித்ததை கண்டறியவும், பொதுவாழ்வில் பொறுப்பேற்றலை அறிமுகம் செய்யும் வகையிலும் 10 மூத்த அரசு அதிகாரிகளின் இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

* மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூரில் ஒரு டிரைவர் பினாமியாக இருந்திருக்கிறார். இவரது பெயரில் ரூ.7 கோடியே 70 லட்சம் மதிப்பிலான நிலம் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலத்துக்கு சொந்தக்காரர், ஒரு கம்பெனியின் அதிபர் ஆவார்.

* மும்பையில் ஒருவர் ஷெல் கம்பெனிகள் (பெயரளவில் செயல்படும் நிறுவனங்கள்) பெயரில் நிறைய அசையா சொத்துகள் வைத்துள்ளார்.

* ராஜஸ்தானில் ஒரு நகைக்கடை அதிபர், ஏழையான தனது முன்னாள் ஊழியர் பெயரில் 9 அசையா சொத்துகள் வைத்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.