Breaking News
மோடியின் 3 ஆண்டு ஆட்சி: விழா கொண்டாடும் பா.ஜ.,

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு பொறுப்பேற்று இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைகிறது. நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பா.ஜ., அரசின், 3 ஆண்டு நிறைவை 20 நாட்கள் விழாவாக கொண்டாட பா.ஜ., முடிவு செய்துள்ளது.
அசாமிலும் பா.ஜ., அரசு பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதனால் இரண்டையும் ஒரே சமயத்தில் கொண்டாடும் விதமாக, நாட்டின் மிக நீளமான பாலத்தை அசாமில் மோடி இன்று திறந்து வைக்க உள்ளார். பா.ஜ., அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் இவ்விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பாலம் திறப்பு விழாவிற்கு பிறகு, கட்சி சார்பில் 5 விழாக்களில் மோடி கலந்து கொள்ள உள்ளார். மத்திய அரசின் 3 ஆண்டு சாதனைகளை விளக்கும் வகையிலான விழாக்கள் இன்று துவங்கி, ஜூலை 15 வரை நாடு முழுவதிலும் உள்ள 900 நகரங்களில் நடத்தப்பட உள்ளது. டில்லி மற்றும் பீகார் தேர்தலில் பெற்ற தோல்வி காரணமாக கடந்த ஆண்டு 2 ஆண்டு நிறைவு விழாவில் பா.ஜ., கொண்டாடவில்லை. ஆனால் இந்த ஆண்டு உ.பி., உள்ளிட்ட மாநில தேர்தல்களில் பெற்ற மாபெரும் வெற்றி காரணமாக பிரம்மாண்டமாக கொண்டாட பா.ஜ., முடிவு செய்துள்ளது.
இது குறித்து நேற்று பேசிய கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, 3 ஆண்டுகளில் மோடி அரசு என்ன செய்தது என சிலர் என்னிடம் கேட்கிறார்கள். 70 ஆண்டுகளாக மற்ற அரசுகள் செய்யாததை இந்த 3 ஆண்டுகளில் மோடி அரசு செய்துள்ளது என்பதை நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.