Breaking News
சாப்பாடு, மருந்து நாளை கிடைக்குமா..?

சரக்கு மற்றும் சேவை வரியான, ஜி.எஸ்.டி., அமலாக்கம் மற்றும், ‘ஆன்லைன்’ மருந்து விற்பனைக்கான அனுமதியை எதிர்த்து, ஓட்டல்கள், மருந்து கடைகள் நாளை(மே 30) மூடப்படுவதால், சாப்பாடு, அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும், ஒரே மாதிரியான வரி விதிக்க வகை செய்யும், ஜி.எஸ்.டி., முறையை, மத்திய அரசு அமல்படுத்த உள்ளது; இதற்கான, வரி விதிப்பு பட்டியலையும் வெளியிட்டு உள்ளது. இதுவரை, 5 சதவீத வரி கட்டி வந்த ஓட்டல்கள், 18 சதவீத வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தென் மாநில ஓட்டல் உரிமையாளர்கள், நாளை, ‘ஸ்டிரைக்’ அறிவித்து உள்ளனர். இதன்படி, ‘தமிழகம் முழுவதும், 1.50 லட்சம் ஓட்டல்கள் மூடப்படும்’ என, தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத் தலைவர், வெங்கடசுப்பு தெரிவித்து உள்ளார்.

அதேபோல, ஆன்லைன் மூலமான மருந்து விற்பனைக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால், ‘உயிர் காக்கும் மருந்துகள் பெறுவதில் சிரமம் ஏற்படும்; போலி மருந்துகள் அதிகம் வரும்’ என, மருந்து வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் அனுமதியை கைவிடக் கோரி, நாடு முழுவதும், நாளை ஸ்டிரைக்கும் அறிவித்து உள்ளனர். இதனால், தமிழகத்தில், மருத்துவமனைகளில் செயல்படும், 3,000 கடைகள் தவிர்த்து மற்ற, 33 ஆயிரம் மருந்துக் கடைகள் மூடப்படுகின்றன.

எனவே, நாளை சாப்பாடு, உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், தமிழக மருந்து வணிகர்களுடன் பேச்சு நடத்திய தமிழக அரசு, ‘அத்தியாவசிய மருந்துகள் கிடைக்க, ஏற்பாடு செய்ய வேண்டும்’ என, வலியுறுத்தி உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.