Breaking News
‘விஜய் – அட்லீ’ பட அப்டேட்: வெளிநாட்டு படப்பிடிப்பு நிறைவு

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வந்த படத்தின் வெளிநாட்டு படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று இருக்கிறது.

‘பைரவா’ படத்தைத் தொடர்ந்து, அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற்று வருகிறது. இப்படத்துக்கு அட்லீ கதை – வசனம் எழுத, ராஜமெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் திரைக்கதை அமைத்துள்ளார்.

சத்யராஜ், வடிவேலு, நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா, எஸ்.ஜே.சூர்யா, கோவை சரளா, உள்ளிட்ட பலர் இப்படத்தில் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

சென்னை, ராஜஸ்தான் படப்பிடிப்பைத் தொடர்ந்து வெளிநாட்டு படப்பிடிப்புக்காக பயணமானது படக்குழு. விஜய், காஜல் அகர்வால், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டவர்களின் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஐரோப்பாவில் காட்சிப்படுத்தியுள்ளார்கள். மேலும், விஜய் – காஜல் அகர்வால் பங்கேற்ற பாடலொன்றை போலாந்து நாட்டிலும் காட்சிப்படுத்தியுள்ளார்கள்.

வெளிநாட்டில் படமாக்க திட்டமிடப்பட்ட காட்சிகள் அனைத்தையுமே திட்டமிட்டப்படி முடித்து திரும்பியிருக்கிறது படக்குழு. ஜுன் முதல் வாரத்திலிருந்து தொடர்ச்சியாக விஜய் – சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகளை சென்னையில் படமாக்க திட்டமிட்டுள்ளார்கள். அத்துடன் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும்.

விஜய் பிறந்த நாளான ஜுன் 22-ம் தேதி படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட முடிவு செய்துள்ளார்கள். தீபாவளி வெளியீடாக இப்படம் திரைக்கு வரவிருக்கிறது. இன்னும் முழுமையான படப்பிடிப்பு முடிவு பெறாத நிலையில், இப்படத்தின் இந்தி டப்பிங் மற்றும் தொலைக்காட்சி உரிமையை சுமார் 11 கோடிக்கு கோல்ட்மைன்ஸ் டெலிபிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.