Breaking News
சென்னை சில்க்ஸ் கட்டடம் ஒரு பகுதி இடிந்து விழுந்தது

சென்னையில் சுமார் 23 மணி நேரமாக எரிந்து வரும் சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

சென்னை தி.நகரில் சென்னை சில்க்ஸ் கட்டடம் நேற்று(31ம் தேதி) அதிகாலை 4.45 மணிக்கு திடீர் என தீ பிடித்தது. இந்த தீ படிப்படியாக கட்டடம் முழுவதும் பரவியது. நேற்று காலை முதல் தீயணைப்பு துறை வீரர்கள் மீட்பு குழுவினர் உட்பட பலர் தீயை அணைக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் கட்டடம் 23 மணி நேரம் எரிந்த நிலையில் இன்று (ஜுன் 1) அதிகாலை சுமார் 3.20 மணிக்கு கட்டடத்தின் வலது புறத்தின் ஒரு பகுதியில் 7 ம் தளம் முதல் 2ம் தளம் வரை திடீர் என இடிந்து விழுந்தது. இடிந்து விழுந்த கட்டடம் பெரும் பகுதி ஸ்ரீ குமரன் ஜுவல்லர்ஸ் இருந்த பகுதி என கூறப்படுகிறது.

அப்பகுதியில் இருந்தவர்களை ஏற்கனவே போலீசார் அப்புறப்படுத்தியிருந்ததால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கட்டடம் முழுவதும் தீ பரவலாக எரிந்து வருகிறது. கட்டத்தின் மேற்கூரையும், மொத்த கட்டடமும் விரைவில் இடிந்து விழும் சூழ்நிலையும் நிலவுகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.