Breaking News
‘ஆன்லைன் ரம்மி’க்கு தெலுங்கானாவில் தடை – மீறினால் கைது நடவடிக்கை பாயும்

கம்ப்யூட்டர் மற்றும் ‘ஸ்மார்ட்’ போன்களில், ‘ஆன்லைன் ரம்மி’ விளையாட்டிற்கு, தெலுங்கானா அரசு தடை விதித்துள்ளது. தடையை மீறி, அந்த விளையாட்டில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவர் என்றும் மாநில அரசு அறிவித்துள்ளது.

தெலுங்கானாவில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியை சேர்ந்த, சந்திரசேகர ராவ் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தில் பெரும்பாலான இளைஞர்கள், ஆன்லைன் விளையாட்டுகளில் அதிக கவனம் செலுத்துவதாக, உளவுத் துறை ஆய்வில் தெரிய வந்தது. மன உளைச்சல்கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன்களில் ஆன்லைன் ரம்மி என்ற பெயரில், சீட்டாட்டம் விளையாடப்படுகிறது.

‘பாதி மூளை, பாதி அதிர்ஷ்டம்’ என, விளம்பரப்படுத்தப்படும் இந்த விளையாட்டில் ஈடுபட்டு பலரும், பொருளாதார ரீதியில் பணத்தை இழப்பதுடன், தேவையற்ற மன உளைச்சலுக்கும் ஆளாவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியானது. இதையடுத்து, இது போன்ற விளையாட்டுகளுக்கு, தெலுங்கானா மாநில அரசு தடை விதித்து உள்ளது.

பாதிப்பு

இது குறித்து, காவல் துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது: ஆன்லைன் ரம்மி விளையாட்டு, இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளது; இது, மூளையை பயன்படுத்தி விளையாடும் ஆட்டம் அல்ல; முழுக்க முழுக்க சூதாட்டமாக நடப்பதால், பலரும் இந்த விளையாட்டிற்கு அடிமையாகியுள்ளனர்.

இது, மாணவர்கள், இளைஞர்களின் செயல் திறனை குறைக்கிறது. இதனால், பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகி அவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.

கைது

எனவே, இது போன்ற ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் வகையில், மாநில அரசு சிறப்பு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது.அதன்படி, ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களை விளையாடுவோர், அந்த விளையாட்டை தங்கள் மொபைல் அல்லது கம்ப்யூட்டரில் வைத்திருப்போர், அதை பிறருக்கு கற்றுத் தருவோர் ஆகியோரை கைது செய்யும் வகையில் அந்த சட்ட திருத்தம் வகை செய்கிறது.

எனவே, மாநிலத்தில், இது போன்ற விளையாட்டுகளில் யாரும் ஈடுபட வேண்டாம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.