Breaking News
திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் நடிகை தமன்னா புகார்

சினிமாவில் நடிகைகள் பாலியல் தொல்லைகளை சந்திப்பதாக பல நடிகைகள் புகார் கூறியுள்ளனர். கேரளாவில் முன்னணி கதாநாயகியை காரில் கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் நடந்தது. நடிகைகள் ராதிகா ஆப்தே, கங்கனா ரணாவத், பிரியங்கா சோப்ரா ஆகியோரும் சினிமாவில் பாலியல் தொல்லைகள் இருப்பதாக குற்றம் சாட்டி உள்ளனர்.

இந்தி நடிகர் ஹிருத்திக் ரோ‌ஷன் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாகவும் கங்கனா ரணாவத் புகார் கூறியுள்ளார். இருவரும் நெருக்கமாக இருந்த படங்களும் இணையதளங்களில் வெளியாகி உள்ளது. சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் புதுமுக நடிகைகள் இந்த தொல்லைகளுக்கு அதிகமாக ஆளாவதாக கூறப்படுகிறது.

டைரக்டர்கள், தயாரிப்பாளர்களுக்கு அனுசரித்துப்போகும் நடிகைகளுக்கே வாய்ப்பு அளிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகை தமன்னாவும் திரையுலகில் பாலியல் வன்மங்கள் நடப்பதாக புகார் கூறியுள்ளார். இதுகுறித்து தமன்னா அளித்த பேட்டி வருமாறு:–

‘‘சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவுகள் இருப்பது உண்மைதான். மற்ற நடிகைகள் சொல்லித்தான் இது எனக்கு தெரிந்தது. ஆனால் எனது வாழ்க்கையில் அதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. நாம் தேர்ந்தெடுக்கும் வழியை பொறுத்துத்தான் நல்லதும் கெட்டதும் வருகின்றன என்பது எனது கருத்து.

2005–ம் ஆண்டு தெலுங்கில் ஸ்ரீ என்ற படத்தில் அறிமுகமானேன். 12 வருடங்களாக சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறேன். சினிமாவுக்கு வந்த புதிதில் இருந்து இப்போதுவரை தவறான கண்ணோட்டத்தோடு என்னை யாரும் அணுகவில்லை. நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் தென்னிந்திய படங்களில் மட்டுமன்றி இந்தி திரையுலகிலும் இருக்கிறது.

சில நடிகைகள் அதை வெளியில் சொல்லி விடுகிறார்கள். இன்னும் சிலர் சொல்வது இல்லை’’.

இவ்வாறு தமன்னா கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.