Breaking News
புதுவையில் 7 வாரியத் தலைவர்கள் நியமனம் நிறுத்தி வைப்பு : கிரண்பேடி உத்தரவு

புதுச்சேரியில் ஆளும் கூட்டணியை சேர்ந்தவர்களை வாரிய தலைவர்களாக நியமித்ததை நிறுத்தி வைத்து, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி MLA-க்களை பாப்ஸ்கோ, நகர அமைப்பு குழுமம் உள்ளிட்ட 7 வாரியங்களுக்கு தலைவர்களாக உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலோடு தலைமை செயலாளராக இருந்த மனோஜ் பரிதா உத்தரவிட்டார். இந்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ள கிரண்பேடி, வாரிய தலைவர் நியமனத்திற்கு சட்டப்படி தன்னிடம் ஒப்புதல் பெறவில்லை என கூறியுள்ளார்.

ஏற்கனவே வாரிய தலைவர்களாக இருந்த 7 பேரின் பதவிக்காலம் முடிந்த நிலையில், அவர்களுக்கு மேலும் 2 ஆண்டு பதவி நீடிப்பு வழங்க முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பதவி நீட்டிப்பிற்கு அனுமதி கோரி துணை நிலை ஆளுநர் மாளிகைக்கு அரசு தரப்பில் கோப்புகள் அனுப்பப்பட்டன. ஆனால் இதற்கு கிரண்பேடி ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில் 7 MLA-க்களை வாரியத் தலைவர்களாக நியமித்து தலைமை செயலாளர் உத்தரவிட்டார். இதன் மூலம் காங்கிரஸ் அரசுக்கும், கிரண்பேடிக்கும் இடையிலான மோதல் சற்றும் வீரியம் குறையவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.