Breaking News
வாடிகன் நகரில் சிகரெட் விற்க தடை போப் ஆண்டவர் அதிரடி உத்தரவு
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனிததலமாக விளங்கும் வாடிகன் நகரம் போப் ஆண்டவரின் ஆளுமையின் கீழ் உள்ளது. ரோமானிய கத்தோலிக்க தேவாலயத்தின் தலைமையகம் இங்குதான் உள்ளது. எனவே இங்கு தினமும் லட்சக்கணக்கானோர் புனித பயணமாக வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், வாடிகன் நகரில் சிகரெட் விற்பனை செய்ய தடை விதித்து போப் ஆண்டவர் பிரான்சிஸ் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார். இந்த தடை உத்தரவு அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது.
இதுகுறித்து வாடிகன் நகரின் செய்தி அலுவலக இயக்குனர் கிரெக் புர்கி கூறுகையில், “மக்களின் உடல் நலத்தை பாதிக்கும் எந்த ஒரு செயலுக்கும் புனித நகரம் தனது பங்களிப்பை அளிக்காது. சிகரெட்டுகள் வாடிகன் நகரின் வருவாய் ஆதாரமாக இருப்பது உண்மைதான். ஆனால் மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் எந்த ஒரு வருவாயும் லாபமாக இருக்காது” என்றார்.
மேலும், சிகரெட் பிடிப்பதால் ஒவ்வொரு ஆண்டும் 70 லட்சம் பேர் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் கூறியதை அவர் சுட்டிக்காட்டினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.