ரோஹிங்கியா அகதிகளில் 3.6 லட்சம் பேருக்கு அம்மை நோய் தடுப்பு மருந்து வழங்க யூனிசெப் முடிவு
ஐ.நா. சபை,
வங்காளதேசத்தின் காக்ஸ் பஜார் பகுதியில் உள்ள முகாம்களில் ரோஹிங்கியா மக்கள் பலர் அகதிகளாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த நவம்பர் 4ந்தேதி இந்த முகாம்களில் ஒருவர் அம்மை வியாதியால் பலியானார். 412 பேருக்கு சந்தேகத்திற்குரிய வகையில் இந்நோய் பாதிப்பு உள்ளது.
இதனை தொடர்ந்து ஐ.நா.வின் அமைப்புகளான உலக சுகாதார அமைப்பு மற்றும் யூனிசெப் ஆகியவை இணைந்து 6 மாதம் முதல் 15 வயது கொண்ட 3 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு அம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பு மருந்துகளை அளிக்க முடிவு செய்துள்ளது.
இதுபற்றி வங்காளதேசத்தின் யூனிசெப் பிரதிநிதி எட்வர்டு பெய்க்பீடர் கூறும்பொழுது, மக்கள் நெருக்கடியான சூழலில் பலர் வசித்து வருவதனால் குறிப்பிடும்படியாக குழந்தைகளுக்கு, பரவும் நோய்கள் தொற்றி கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன.
இந்த வியாதி பரவலை தடுக்கும் வகையில், உடனடியாக பெருமளவிலான குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் கூட்டு முயற்சியானது தேவைப்படுகிறது என கூறியுள்ளார்.
இதேபோன்று வங்காளதேசத்தின் உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி என். பரணீதரன் கூறும்பொழுது, நோய் பரவல் தடுப்பு முயற்சியின் ஒரு பகுதியாக, நிரந்தர சுகாதாரவசதி கொண்ட 43 மையங்கள், 56 நோய் தடுப்பு குழுக்கள் மற்றும் முக்கிய எல்லை நுழைவு பகுதிகளில் உள்ள நோய்தடுப்பு குழுக்கள் ஆகியவை இணைந்து 6 மாதம் முதல் 15 வருடங்கள் வரையிலான வயது கொண்டோருக்கு நோய் தடுப்பு மருந்துகளை வழங்கும் என கூறியுள்ளார்.