Breaking News
கேரளாவில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 167 ஆக உயர்வு

கேரளாவில் கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு தென்மேற்கு பருவ மழை கொட்டி தீர்த்து வருகிறது. இடைவிடாது பெய்த பேய்மழையால் கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளா நிலைகுலைந்தது. மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளன.

இதுவரை மழைவெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 167 பலியாகி இருப்பதாக அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகள், உடைமைகளை இழந்து அரசின் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 14-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெள்ள நீரில் பாதிக்கப்பட்டுள்ளன.

மாநிலத்தில் உள்ள 39 அணைகளில் 35 அணைகள் நிரம்பித் திறந்துவிடப்பட்டுள்ளதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாநிலத்தின் பெரும்பகுதி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினருடன் இணைந்து முப்படையினரும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், மீட்பு பணிக்காக கூடுதலாக இந்திய கடற்படைக்கு சொந்தமான 4 கப்பல்கள் கொச்சி வந்துள்ளது. இந்த மீட்புக்குழுவில் இந்த கப்பலில் வந்த கடற்படையினரும் இணைய உள்ளனர். நிவாரணப்பொருட்களும் கப்பல் மூலமாக கொண்டு வரப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.