Breaking News
காவிரியில் வெள்ளம்: ஈரோடு, கரூர், திருச்சி மாவட்ட கரையோர பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன

ஈரோடு கருங்கல்பாளையம் பகுதி காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அங்குள்ள பழைய பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. ரெயில்வே பாலத்தை தொட்டுக்கொண்டு தண்ணீர் செல்வதால் ரெயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன.

லக்காபுரம் பகுதியில் வயல்வெளிகளிலும் தண்ணீர் புகுந்தது. பாசூர் பகுதியில் தென்னை மரங்களின் கொண்டை பகுதி மட்டுமே வெளியே தெரியும் அளவுக்கு வெள்ளம் பாய்ந்து ஓடியது. கணபதிபாளையம் அருகே உள்ள மன்னாதம்பாளையம் குலவிளக்கு அம்மன் கோவில் மண்டபம் பகுதிவரை காவிரி தண்ணீர் புகுந்து உள்ளது.

காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பவானி பகுதியில் கரையோரங்களில் உள்ள 600 வீடுகளை வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. இதனால் வெள்ளம் பாதித்த பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். பவானி சங்கமேஸ்வரர் கோவில் பரிகார மண்டபத்துக்குள் காவிரி தண்ணீர் புகுந்தது.

பவானிசாகர் அணையில் இருந்து நேற்று மாலை பவானி ஆற்றில் வினாடிக்கு 27 ஆயிரத்து 700 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் 250-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதில் 50 வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன.

கரூர் தவுட்டுப்பாளையம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 90 குடும்பங்களை சேர்ந்த 275 பேர் சமுதாயக்கூடம், பள்ளி உள்ளிட்டவற்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பல இடங்களில் கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. உத்தமர்சீலி தரைப்பாலத்தில் காவிரி தண்ணீர் செல்வதால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு சுமார் 200 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழை தோட்டம் தண்ணீரில் மிதக்கிறது. திருவானைக்காவல் கும்பகோணத்தான் சாலை பகுதியில் உள்ள மாந்தோப்பு, வாழைத்தோட்டத்தில் வெள்ளம் புகுந்தது. அங்குள்ள தெருக்களில் காவிரி தண்ணீர் புகுந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. 100-க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்து தண்ணீர் நிற்கிறது. உறையூர் பகுதியில் ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

கொள்ளிடம் இரும்பு பாலத்தின் 18-வது தூண் பகுதியில் விரிசல் ஏற்பட்டதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு தடுப்பு சுவர் எழுப்பப்பட்டது. விரிசல் ஏற்பட்ட தூண் பகுதி படிப்படியாக கீழே இறங்கி வருகிறது. நேற்று அது மேலும் சற்று கீழே இறங்கி ‘வி’ வடிவில் காணப்பட்டது. உடையும் தருவாயில் உள்ள பாலத்தை காண திரளான மக்கள் அங்கு கூடினர்.

திருச்சி-ஸ்ரீரங்கத்தை இணைக்கும் காவிரி பாலத்தின் முதல் தூணில் லேசான விரிசல் ஏற்பட்டு அதுவும் உடையும் அபாயத்தில் உள்ளதாக தகவல் பரவியது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், பாலத்தில் உள்ள விரிசல் வெள்ளத்தால் ஏற்பட்டது அல்ல. அதனால், எவ்வித பாதிப்பும் இல்லை. காவிரியில் தண்ணீர் குறைந்ததும் அதை சீரமைக்கும் பணி தொடங்கும்’ என்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.