Breaking News
பெண்கள் கபடியில் இந்தியா அரைஇறுதிக்கு முன்னேற்றம்

ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கான கபடி போட்டியில் 7 முறை சாம்பியனான இந்திய அணி (ஏ பிரிவு) நேற்று தனது கடைசி லீக்கில் தாய்லாந்துடன் மோதியது. விறுவிறுப்பான இந்த மோதலில் இந்திய அணி 49-30 என்ற புள்ளி கணக்கில் 3-வது வெற்றியை பதிவு செய்தது. ஏறக்குறைய அரைஇறுதியை இந்திய அணி எட்டிவிட்டாலும் மற்ற அணிகளின் முடிவை பொறுத்தே அதை அறுதியிட்டு சொல்ல முடியும்.

கபடியில் பெண்கள் பிரிவில் இந்திய அணி (ஏ பிரிவு) ஒரே நாளில் இலங்கையை 38-12 என்ற புள்ளி கணக்கிலும், இந்தோனேஷியாவை 54-22 என்ற புள்ளி கணக்கிலும் நொறுக் கியது. லீக் சுற்றில் 4 ஆட்டங்களிலும் வெற்றி கண்டு தனது பிரிவில் முதலிடத்தை பிடித்த இந்திய பெண்கள் அணி அரைஇறுதிக்குள் நுழைந்தது.

டென்னிசில் பெண்கள் ஒற்றையர் 3-வது சுற்றில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் ஹோஜூமியை விரட்டியடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார். மற்றொரு இந்திய வீராங்கனை கர்மான் கவுர் தான்டி 6-2, 4-6, 6-7 (4) என்ற செட் கணக்கில் சீனத்தைபேயின் லியாங்கிடம் வீழ்ந்தார்.

கலப்பு இரட்டையர் முதலாவது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- அங்கிதா ரெய்னா ஜோடி 6-3, 2-6, 11-9 என்ற செட் கணக்கில் கொரியாவின் லீ ஜிமூன்- கிம் நரி இணையை வீழ்த்தி கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது. ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-திவிஜ் சரண், ராம்குமார்-சுமித் நாகல் ஜோடிகள் கால்இறுதியை எட்டின.

ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் பேலன்ஸ் பீம் பிரிவில் இந்திய நட்சத்திர வீராங்கனை தீபா கர்மாகர் இறுதி சுற்றை எட்டினார். அதே சமயம் அவருக்கு பிடித்தமான வால்ட் பிரிவில் 13.225 புள்ளிகளுடன் தகுதி சுற்றுடன் வெளியேற நேரிட்டது. ஆனால் பிரனதி நாயக், அருணா ரெட்டி ஆகிய இந்திய மங்கைகள் இந்த பிரிவில் இறுதிசுற்றை அடைந்திருக்கிறார்கள்.

நீச்சலில் 50 மீட்டர் பிரிஸ்டைல் பிரிவில் இந்திய வீரர் விர்தவால் காதே நூலிலை வித்தியாசத்தில் வெண்கலப்பதக்கத்தை நழுவ விட்டார். அவர் 22.47 வினாடிகளில் இலக்கை கடந்து 4-வது இடத்தை பெற்றார். வெண்கலப்பதக்கத்தை பெற்ற ஜப்பானின் நகாவ் ஷூனிச்சி இலக்கை கடந்த நேரம் 22.46 வினாடி ஆகும்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.