Breaking News
ஆக்கியில் இந்தியா ‘ஹாட்ரிக்’ வெற்றி

ஆசிய விளையாட்டு தொடரில், வில்வித்தையில் சோகம் தொடருகிறது. காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவின் கால்இறுதியில் இந்தியா (சுரேகா, அபிஷேக் வர்மா ஜோடி) 153-155 என்ற புள்ளி கணக்கில் ஈரானிடம் தோல்வி அடைந்தது.

ரிகர்வ் கலப்பு அணிகள் பிரிவின் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் தீபிகா குமாரி, அதானு தாஸ் ஜோடி 4-5 என்ற புள்ளி கணக்கில் மங்கோலியாவின் உரன்டுங்கலாக்-ஒட்கோன்போல்டு இணையிடம் தோற்று வெளியேறியது.

பேட்மிண்டனில் ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்றில் இந்திய முன்னணி வீரர் ஸ்ரீகாந்த் 21-23, 19-21 என்ற நேர் செட் கணக்கில் விங் கி வின்சென்டிடம் (ஹாங்காங்) மண்ணை கவ்வினார். மற்றொரு இந்திய வீரர் பிரனாயும் 2-வது சுற்றுடன் நடையை கட்டினார்.

ஆக்கியில் கலக்கல்

ஆண்கள் ஆக்கி போட்டியில் ஏ பிரிவில் நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி 8-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை நொறுக்கி ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணியில் தில்பிரீத் சிங், சுனில், ருபிந்தர் பால் சிங்(2 கோல்), மன்தீப்சிங் (2), ஆகாஷ்தீப்சிங், விவேக் ஆகியோர் கோல் போட்டனர். இந்த தொடரில் இன்னும் ஒரு கோல் கூட வாங்காத இந்திய அணி ஏற்கனவே இந்தோனேஷியாவை 17-0 என்ற கோல் கணக்கிலும், ஹாங்காங்கை 26-0 என்ற கோல் கணக்கிலும் பந்தாடியது.

குத்துச்சண்டை போட்டியில் முதல் சுற்றில் (69 கிலோ) இந்திய வீரர் மனோஜ்குமார் 5-0 என்ற புள்ளி கணக்கில் சங்காய் வாங்டியை (பூட்டான்) தோற்கடித்தார். மற்றொரு இந்திய வீரர் கவுரவ் சோலங்கி 52 கிலோ எடைப்பிரிவில் ரோமி டனகாவிடம் (ஜப்பான்) 0-5 என்ற புள்ளி கணக்கில் ‘சரண்’ அடைந்தார்.

தீபா கர்மாகர் தோல்வி

ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியின் பேலன்ஸ் பீம் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை தீபா கர்மா ஏமாற்றம் அளித்தார். அந்தரத்தில் பல்டி அடித்து சாகசத்தை காட்டிய அவரால் 12.500 புள்ளிகள் எடுத்து 5-வது இடமே பிடிக்க முடிந்தது.

ஹேண்ட்பால் போட்டியில் இந்திய ஆண்கள் அணி 28-27 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.