Breaking News
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கன்னியாஸ்திரி, வாடிகன் பிரதிநிதிக்கு கடிதம்

கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு கன்னியாஸ்திரி, பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கத்தோலிக்க மறைமாவட்ட பேராயர் பிராங்கோ முலக்கல் மீது கற்பழிப்பு புகார் கொடுத்துள்ளார். அவருக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி, அவரது சக கன்னியாஸ்திரிகள் 5 பேர் உள்பட ஏராளமானோர், கொச்சியில் கடந்த 5 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

கன்னியாஸ்திரி புகார் மீதான விசாரணை, சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாகவும், யாரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்றும் கேரள மந்திரி இ.பி.ஜெயராஜன் நேற்று கூறினார்.

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி, டெல்லியில் உள்ள வாடிகன் தூதரகத்தின் இந்திய பிரதிநிதி கியாம்படிஸ்டா டிகுவாட்ரோவுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், “கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டுவரை, பேராயர் முலக்கல், என்னை பலதடவை கற்பழித்துள்ளார். அச்சமும், அவமானமும் இருந்ததால், நான் வெளியே சொல்லவில்லை. தற்போது நான் புகார் கொடுத்த பிறகும், திருச்சபை கண்ணை மூடிக்கொண்டிருப்பது ஏன்?

பேராயர் முலக்கலை அப்பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும். அவர் தனது செல்வாக்கையும், பணபலத்தையும் பயன்படுத்தி, விசாரணையை முடக்க முயன்று வருகிறார். ஆகவே, தாங்கள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.