Breaking News
ராஜஸ்தான், ஆந்திராவை தொடர்ந்து மேற்கு வங்காளத்தில் பெட்ரோல், டீசல் வரி குறைப்பு

பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து வருகிறது. ஆனாலும் அவற்றின் மீதான உற்பத்தி வரியை குறைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று மத்திய அரசு கைவிரித்து விட்டது.

மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கிற வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் அவற்றின் மீதான மதிப்பு கூட்டு வரி 4 சதவீதம் குறைக்கப்பட்டது. இதனால் அவற்றின் விலை லிட்டருக்கு தலா ரூ.2.50 குறைந்து உள்ளது.

ஆந்திராவிலும் பெட்ரோல், டீசல் மீதான வரியில் தலா ரூ.2 குறைக்கப்படுவதாக அந்த மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.

இந்த நிலையில் மேற்கு வங்காளத்திலும் அவற்றின் மீதான வரியில் தலா ரூ.1 குறைப்பதாக அந்த மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று அறிவித்தார். இது தொடர்பான அறிவிப்பை அவர் கொல்கத்தாவில் வெளியிட்டபோது, “இப்போதைக்கு பெட்ரோல், டீசல் மீதான வரியை லிட்டருக்கு தலா ரூ.1 குறைக்க முடிவு செய்து உள்ளோம். மத்திய அரசும் அவற்றின் மீதான வரியைக் குறைக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

மேலும் அவர் கூறும்போது, “மத்தியில் அமைந்து உள்ள பாரதீய ஜனதா கூட்டணி அரசு 9 முறை பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியைக் கூட்டி உள்ளது. ஆனால் நாங்கள் ஒருபோதும் அவற்றின் மீதான வரியை உயர்த்தியது இல்லை” என்று குறிப்பிட்டார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.