Breaking News
ரூ.8 லட்சம் லஞ்சம் கேட்ட ஜி.எஸ்.டி. சூப்பிரண்டு கைது

அரியானா மாநிலம் ரோதக்கில் மத்திய ஜி.எஸ்.டி. கமி‌ஷனர் அலுவலகத்தில் சூப்பிரண்டாக பணியாற்றி வருபவர் சுதேஷ் குமார். இவர், அந்த பகுதியில் ஒரு நிறுவனம் செய்த அரிசி விற்பனை மீது மத்திய ஜி.எஸ்.டி. (சரக்கு–சேவை வரி) விதிக்காமல் இருப்பதற்காக, ரூ.10 லட்சம் லஞ்சமாக தருமாறு கேட்டார். அந்த நிறுவன அதிபர், சூப்பிரண்டு சுதேஷ் குமாரை தனியாக சந்தித்து பேசினார். அப்போது, லஞ்ச தொகையை ரூ.8 லட்சமாக சுதேஷ் குமார் குறைத்துக்கொண்டார். நிறுவன அதிபர், ரூ.1 லட்சம் மட்டும் கொடுத்தார். அதைப் பெற்றுக்கொண்ட சுதேஷ் குமார், மீதி ரூ.7 லட்சத்தை விரைவில் தருமாறு கூறினார். இதுபற்றி அந்த நிறுவன அதிபர், சி.பி.ஐ.யில் புகார் செய்தார். அதன்பேரில், சுதேஷ் குமாரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். டெல்லி உள்ளிட்ட இடங்களில் அவரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அதில், ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் ரொக்கமும், வணிக, குடியிருப்பு சொத்துகளுக்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. சுதேஷ் குமார், அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஒரு நாள் சி.பி.ஐ. காவலில் விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.