Breaking News
முல்லை பெரியாறு அணை விவகாரம்: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம்

கேரள மாநிலம் தேக்கடியில் அமைந்துள்ள 123 ஆண்டுக்கால முல்லைப் பெரியாறு அணையை தமிழக அரசு பராமரித்து வருகிறது.

முல்லை பெரியாறு அணை வலுவிழந்துவிட்டதாக கூறி அணையின் நீர்மட்டத்தை கேரள அரசு 136 அடியாகக் குறைத்தது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் முல்லை பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணை கட்ட எந்த முயற்சியும் மேற்கொள்ளக்கூடாது என்று ஐந்து நீதிபதிகள் அமர்வு கண்டிப்பாக உத்தரவிட்டது.

இந்த நிலையில் முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட கேரள அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. அணை கட்டுவது தொடர்பாக ஆய்வு நடத்த அனுமதி கோரி மத்திய வனம், சுற்றுச்சூழல் துறையிடம் கேரள அரசு விண்ணப்பித்தது. இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கவில்லை.

எனினும் மத்திய அரசு அனுமதி வழங்கிவிட்டதாக கேரள அரசு அவ்வப்போது தகவல்களை வெளியிட்டு வந்தது. இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவதற்கான சாத்தியக் கூறு ஆய்வை 7 நிபந்தனைகளுடன் மேற்கொள்ள கேரளாவுக்கு மத்திய சுற்றுசூழல்துறை அனுமதி அளித்துள்ளது.

முல்லைபெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான சாத்தியக் கூறு ஆய்வு நடத்த நிபந்தனைகளுடன் கேரள அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது. மேலும் முல்லைப் பெரியாறுக்கு மாற்றாக புதிய அணை கட்டும் ஆய்வை தொடங்க தமிழக அரசின் அனுமதி கட்டாயம் என மத்திய சுற்றுச் சூழல்துறை கூறி உள்ளது.

இந்த நிலையில் இந்த ஆய்வை தடுத்து நிறுத்த கோரி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். தமிழக அரசை கலந்தாலோசிக்காமல் மத்திய சுற்று சூழல் அமைச்சகம் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டு உள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.