Breaking News
உலக மல்யுத்தம் இந்திய வீராங்கனை பூஜா தண்டா வெண்கலப்பதக்கம் வென்றார்

15–வது உலக மல்யுத்த சாம்பியஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான பிரீஸ்டைல் 57 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை பூஜா தண்டா பங்கேற்றார். இதில் முதல் சுற்றில் ரஷிய வீராங்கனை ஒல்கா கோரோ‌ஷவ்சேவாவையும், 2–வது சுற்றில் நைஜீரியா வீராங்கனை ஒடுனயோ அடிகுரோய்யையும் வீழ்த்திய இந்திய வீராங்கனை பூஜா தண்டா கால்இறுதியில் சீன வீராங்கனை ரோங் நிங்நிங்கிடம் 3–4 என்ற கணக்கில் தோல்வி கண்டார். பூஜா தண்டாவை வீழ்த்திய ரோங் நிங்நிங் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதை தொடர்ந்து பூஜா தண்டாவுக்கு ரிபிசேஜ் வாய்ப்பு கிடைத்தது. இதன் கால்இறுதியில் இந்திய வீராங்கனை பூஜா தண்டா, 2017–ம் ஆண்டு ஐரோப்பிய சாம்பியனான கிரேஸ் ஜேக்கப் புல்லினை (நார்வே) எதிர்கொண்டார். இதில் தொடக்க முதலே ஆதிக்கம் செலுத்திய பூஜா தண்டா 10–7 என்ற கணக்கில் கிரேஸ் ஜேக்கப் புல்லினை சாய்த்து வெண்கலப்பதக்கத்தை வென்றார்.
அரியானாவை சேர்ந்த 24 வயதான பூஜா தண்டாவின் சிறப்பான செயல்பாடு இதுவாகும். இதன் மூலம் உலக மல்யுத்த போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற 4–வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை பூஜா தண்டா பெற்றார். ஏற்கனவே இந்திய வீராங்கனைகள் அல்கா தோமர் (2006), கீதா (2012), பபிதா போகத் (2012) ஆகியோர் உலக போட்டியில் வெண்கலம் வென்று இருந்தனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.